அண்ணா சொல்லாததையா சம்பத் சொல்லி விட்டார்?: வைகோ
திருச்சி: இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு இந்தியா தொடர்ந்து ஆயுதம் வழங்குமேயானால் டெல்லியில் தமிழகத்திற்கு தனி தூதரகம் திறக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று நாஞ்சில் சம்பத் பேசி இருக்கிறார் என கூறி இருக்கிறார்கள். இந்த கருத்தை அண்ணா சொல்லவில்லையா? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் என்ஜினீயர் என்.ஷேக்முகமது மகன் திருமண விழா திருச்சியில் நேற்று நடந்தது.
அண்ணா சொல்லவில்லையா?
இதில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில், வீர முழக்கம் இடும் நாஞ்சில் சம்பத் இந்த விழாவுக்கு வரவில்லை. அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்திய நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக அவர் மீது வழக்கு போட்டு இருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு இந்தியா தொடர்ந்து ஆயுதம் வழங்குமேயானால் டெல்லியில் தமிழகத்திற்கு தனி தூதரகம் திறக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் பேசி இருக்கிறார் என வழக்கில் கூறி இருக்கிறார்கள். இந்த கருத்தை அண்ணா சொல்லவில்லையா?
திராவிட நாடு கோரிக்கையை தான் கைவிட்டு இருக்கிறோம். ஆனால் அதற்கான காரணங்கள் எல்லாம் உயிரோடு தான் இருக்கின்றன என்று அண்ணா கூறி இருக்கிறாரே?
சம்பத் சொன்னதை வழி மொழிகிறேன்..
இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசின் ஆயுதங்களும் அதனை அனுப்பி வைத்த சோனியாவும் தான் காரணம் என்பதால் நாஞ்சில் சம்பத் சோனியாவை முசோலினி வடிவில் பார்க்கிறேன் என பேசி இருக்கிறார். நான் அதை வழிமொழிகிறேன்.
எங்களுக்கு இறையாண்மை மீது நிறையவே நம்பிக்கை உண்டு. இறையாண்மைக்கு எதிராக நாங்கள் என்றும் செயல்பட்டதில்லை என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications