பணிக்கு திரும்பிய அரசு- திமுக வக்கீல்கள்-கனகராஜ் எச்சரிக்கை
சென்னை: கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்று திமுக வக்கீல்கள் மற்றும் அரசு வக்கீல்கள் இன்று முதல் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் சங்கத்திலிருந்து நீக்குவோம் என சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் எச்சரித்துள்ளார்.
திமுக சட்டப் பிரிவு கூட்டம் நேற்று நடந்தது. அதில், இன்று முதல் கோர்ட்டுகளுக்குத் திரும்புவது என முடிவு செய்யப்பட்டது.
முதல்வர் கருணாநிதியின் உருக்கமான வேண்டுகோள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலேவின் வேண்டுகோள் ஆகியவற்றை ஏற்று இந்த முடிவெடுப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் பணியாற்றும் திமுக மற்றும் அரசு வக்கீல்கள் பணிக்குத் திரும்பினர்.
சென்னை உயர்நீதிமன்ற திமுக மற்றும் அரசு வக்கீல்கள் திமுக சட்டப் பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கோர்ட்டுக்கு வந்தனர். தலைமை நீதிபதி கோகலேவை சந்தித்து தாங்கள் பணிக்குத் திரும்பி விட்டதாக அறிவித்தனர்.
இதேபோல மாநிலம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளிலும் திமுக மற்றும் அரசு வக்கீல்கள் பணிக்குத் திரும்பி விட்டதாகவும், பிற வக்கீல்களும் பெருமளவில் பணிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் பாரதி தெரிவித்தார்.
இதுகுறித்து வக்கீல்கள் போராட்டக்குழு தலைவர் பால்கனகராஜ் கூறுகையில், நமது போராட்டம் போலீசுக்கு எதிரானது. போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் நமது நோக்கம். கோர்ட்டுக்கு சென்ற தி.மு.க. வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்கள் சங்கத்தில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவார்கள். சங்கம் மூலம் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம். பின்னர் நோட்டீஸ் அனுப்பி நிரந்தரமாக நீக்கி விடுவோம் என்றார்.
பால் கனராஜ் திமுகவைச் சேர்ந்தவர்தான். ஆனால் சமீபத்தில் கட்சியிலிருந்து அவர் விலகி விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
முன்னதாக நேற்று நடந்த திமுக வக்கீல்கள் பிரிவு கூட்டத்தில்,
தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் சோனியாவின் படங்களை எரித்த வக்கீல்களை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற அறிவுரைப்படியும், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ஹோகலே மற்றும் தமிழக முதல்வரின் உருக்கமான வேண்டுகோளினை ஏற்றும், இன்று 11ம் தேதி முதல் திமுக வக்கீல்கள் நீதிமன்றத்துக்கு செல்வார்கள்.
இதை அவர்கள் தங்களது கடமையாக கருத வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.