பாமக இருக்கும் கூட்டணி தான் வெற்றிகூட்டணி: அன்புமணி
சென்னை: பாமக வெற்றி கூட்டணியில் சேரும் என கூறுகிறார்கள். அது அப்படியல்ல. நாங்கள் இருக்கும் கூட்டணி தான் வெற்றிபெறும் என மத்திய சுகாதரத்துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த ரோட்டரி சங்க கூட்டத்தில் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
புகைபிடிப்பது, மது அருந்துவது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, பீட்சா, சிப்ஸ் போன்ற ஜங்க்' உணவு வகைகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்தப் பணியில் ரோட்டரி சங்கத்தினரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து உணவுப் பண்டங்களிலும் என்னென்ன பொருட்கள் அடங்கியுள்ளன என்றும், அதிலுள்ள சத்துக்கள் என்ன என்றும் அச்சிட வேண்டியது வரும் 19ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது.
போலியோ ஒழிப்புத் திட்டத்தில் ரோட்டரி சங்கத்தின் பணி மகத்தானது. கிராம மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் உலகிலேயே மிகப்பெரிய பொதுசுகாதாரத் திட்டம் ஆகும்.
10-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இலவச டிவியை விரும்பவில்லை ..
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைத்த வருமானம் ரூ.4 ஆயிரம் கோடியில் இருந்து 12 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மக்களிடம் இருந்து பணத்தைப் பெற்று இலவசமாக டிவி கொடுப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஒருவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதாவது மக்களுக்கு கல்வியறிவையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தர வேண்டும்.
குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. எங்கள் கட்சிக்கு வாய்ப்புக் கொடுத்தால் நாங்களும் மதுவிலக்கை அமல்படுத்தி குஜராத்தைப் போல தமிழ்நாட்டையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம். பொருளாதார வீழ்ச்சி இதுவரை சுகாதாரத் துறையைப் பாதிக்கவில்லை.
சில நாட்களில் கூட்டணி முடிவு ..
வெற்றி பெறும் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இருப்பதாக கூறுகிறீர்கள். அது அப்படியல்ல. பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும். அடுத்த சில நாட்களில் கட்சியின் பொதுக்குழு கூடி, கூட்டணி பற்றி முடிவு செய்யும். 2004 தேர்தலைவிட வரும் தேர்தலில் பாமக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி கட்சிதான் முடிவு செய்யும் என்றார்.