கோடை: நிரம்பியது பூண்டி-தப்பியது சென்னை
சென்னை: சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. பூண்டி ஏரி நிரம்பியுள்ளதால் வரும் கோடையில் சென்னையில் குடிநீருக்கு தட்டுப்பாடு இருக்காது என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் பூண்டி ஏரியும் ஒன்று. ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு இடையிலான கிருஷ்ணா குடிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை அடுத்து ஆந்திர அரசு ஆண்டுக்கு 12 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்கி வருகிறது.
கோடைக்கு முன்பாக ஜனவரி முதல் ஏப்ரலுக்குள் 4 டிஎம்சியும், அதன் பின்னர் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் 8 டிஎம்சியும், என இரண்டு தவணைகளில் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திர அரசு கடந்த ஜனவரி 13ம் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து நீரை திறந்துவிட்டுள்ளது. இங்கிருந்து ஊத்துக்கோட்டை ஜீரோபாயிண்ட் வழியாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 654 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதையடுத்து பூண்டியின் நீர்மட்டம் 34.12 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவே 35 அடி தான்.
இதையடுத்து ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் இணைப்பு கால்வாய் மூலமாக புழல் ஏரிக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதுவரை ஆந்திராவிலிருந்து 1.653 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. ஒப்பந்தப்படி வரும் ஏப்ரலுக்குள் மேலும் 2.347 கனஅடி நீர் கிடைக்கும் என்பதால் இம்முறை சென்னை மக்களுக்கு கோடையி்ல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.