ஆந்திராவில் ராகிங் கொடுமை: மாணவி தற்கொலைக்கு முயற்சி
ஹைதராபாத்: இமாச்சலப் பிரதேசத்தில் ராகிங்குக்கு மாணவன் பலியான சம்பவத்தின் வடு இன்னும் மறையாத நிலையில் ஆந்திர மாநிலம் பாப்ட்லா நகரில் ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பாப்ட்லா நகரில் அரசு விவசாய பொறியியல் கல்லூரி உள்ளது. அங்கு படித்து வரும் 20 வயது மாணவி ராகிங் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
அவரது சீனியர்கள், மாணவியை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் முன்பு உடைகளைக் களைந்து நடனமாடுமாறும் அவரை வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்து போன அந்த மாணவி, தலைக்குப் பூசும் ஹேர் டையை குடித்து விட்டார். இதனால் மயக்கமடைந்து விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
கல்லூரியில், சேர்ந்தது முதலே தனது மகள் ராகிங் கொடுமைக்கு ஆளாகி வந்ததாக மாணவியின் தந்தை கூறியுள்ளார். இருப்பினும் இதை கல்லூரி நிர்வாகத்திடம் சொல்ல வேண்டாம் என்றும், அப்படிச் சொன்னால் தனது படிப்பு பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது மகளை அடிக்கடி கல்லூரி விடுதியின் மாடிக்கு அழைத்து அங்கு நடனமாறு கூறி கொடுமைப்படுத்தியுள்ளனர் சீனியர்கள். இங்கு ராகிங் நடப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகளுக்கு ஏற்பட்ட கதி யாருக்குமே ஏற்படக் கூடாது என்றும் அந்த அப்பாவித் தந்தை கண்ணீருடன் கூறினார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மாணவி முதலில் பிழைக்க மாட்டார் என்றுதான் டாக்டர்கள் கருதினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறிது நேரத்திலேயே அவருக்கு நினைவு திரும்பியது. உடனடியாக பத்திரிக்கையாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் நடந்ததை விவரித்துக் கூறினார் அந்த மாணவி.