கூட்டணிக்கு விஜய்காந்த் வந்தால் வரவேற்போம்-கருணாநிதி
அப்போது நிருபர்களை சந்தித்த கருணாநிதியிடம், விஜயகாந்தின் தேமுதிகவுக்கு கூட்டணியில் இணைய காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது குறித்து கேட்டபோது, நல்ல செய்தி எங்கிருந்து வந்தாலும் வரவேற்போம் என்று பதிலளித்தார்.
பாமகவுடனான கூட்டணி குறித்து கேட்டதற்கு, அந்தக் கட்சியின் நிர்வாகிகள் யாரும் இன்னும் என்னை அணுகவில்லையே என்றார்.
மீண்டும் சிபிஐ, சிபிஎம், அதிமுக, கெளடா ஆகியோர் இணைந்து 3வது அணி தொடங்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, 4வது முறையாக உருவாகியுள்ள 3வது அணி என்று செய்தி போடலாம் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகளை எங்கள் கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால் திருமாவளவனோ கூட்டணித் தலைவரான நீங்கள்தான் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று கேட்டபோது, நேற்று திமுக- காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் இன்னும் முன்னேற்றம் ஏற்படும். அப்போது 'உங்கள் ஆசை' நிறைவேறலாம், அல்லது நிறைவேறாமலும் போகலாம் என்றார்.
தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ள நீங்கள் வழக்கமான பணியைத் தொடங்கி விட்டீர்களா? என்று கேட்டதற்கு, நான் கோட்டைக்கு வராவிட்டாலும் அதிகாரிகளை தினமும் சந்தித்துத்தான் வருகிறேன். மருத்துவமனையில் இருந்தபோதும், இல்லம் திரும்பிய பிறகும் தலைமை செயலாளர் முதல் அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து, அவர்கள் தெரிவிக்கும் விபரங்களை எல்லாம் விசாரித்து அதன் அடிப்படையில் முடிவுகள் எடுத்து அறிவிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் வழக்கறிர்கள் நீதிமன்றத்தை புறக்கணிக்கிறார்களே என்று கேட்டபோது, சாதாரண மக்கள் வக்கீல்களே கோர்ட்டை மதிக்கவில்லை என்றால் பிறகென்ன இருக்கிறது என்று சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள். நான் அவ்வளவுதான் சொல்ல முடியும் என்றார் கருணாநிதி.
கருணாநிதிக்கு கடந்த மாதம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகு ஆபரேஷன் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஒரு மாதமாவது கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனாலும் இன்று அவர் தலைமைச் செயலகம் வந்து பணிகளைத் துவக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
காலை அவர் தலைமைச் செயலகம் வந்தபோது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.