காங்-விஜய்காந்துக்கு 15 இடங்கள் தர திமுக ரெடி?

கடந்த மக்களவைத் தேர்தலில் கோபிசெட்டிப்பாளையம், திண்டுக்கல், பழனி, பெரியகுளம், சேலம், ராசிபுரம், நீலகிரி, மயிலாடுதுறை சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்றது.
இம்முறை தனக்கு மட்டும் 16 இடங்களும் தேமுதிகவும் வந்தால் 20 இடங்களும் வேண்டும் என திமுகவிடம் காங்கிரஸ் கோரியுள்ளது.
தேமுதிக கூட்டணிக்கு வந்தால் தங்களுக்கு தரப்படும் இடங்களில் இருந்து 4 இடங்களை விஜய்காந்துக்கு ஒதுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. விஜய்காந்த் அடம்பிடித்தால் மேலும் ஒரு தொகுதி என 5 இடங்கள் வரை விட்டுத் தர காங்கிரஸ் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
இதைச் சொல்லித் தான் விஜய்காந்திடம் காங்கிரஸ் தரப்பு பேச்சு நடத்தி வருகிறது.
ஆனால், விஜய்காந்த்தை கூட்டணிக்குள் இழுத்து வந்தால் காங்கிரசுக்கும் தேமுதிகவுக்குமாக சேர்த்து 15 இடங்கள் தருவதாக திமுக கூறியுள்ளது. 10, 5 அல்லது 11, 4 என காங்கிரசும், விஜய்காந்தும் எப்படி வேண்டுமானாலும் பிரித்துக் கொள்ளலாம் என திமுக கூறிவிட்டது.
கூட்டணிக்குள் பாமக எப்படியும் வந்துவிடும் என்று கருதும் திமுக தரப்பு, அவர்களுக்கு கடந்த முறையை விட கூடுதலாக ஒரு இடத்தை ஒதுக்கி மொத்தம் 7 இடங்கள் தரவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் புதிய கட்சியான மனித நேயக் கட்சியையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு ஒரு இடமும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு இடமும் வழங்க திமுக திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு தமிழகம், புதுவையில் மொத்தமுள்ள 40 இடங்களி்ல் கூட்டணிக் கட்சிகளுக்கு 24 இடங்களை ஒதுக்கியது போக மீதமுள்ள 16 தொகுதிகளில் தானே போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது.
ஆனால், தேமுதிக வராவிட்டால் காங்கிரசுக்கு தரப்படும் தொகுதிகள் அதிகரிக்கலாம். அதே போல பாமக கூட்டணிக்குள் வராவிட்டாலும் காங்கிரசுக்கு தரப்படும் இடங்களும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு தரப்படும் இடங்களும் அதிகமாகலாம்.
மனித நேயக் கட்சி ஒரு இடத்தை ஏற்க மறுத்தால் அவர்களுக்கும் கூடுதலாக ஒரு இடத்தை ஒதுக்க வேண்டிய நிலை திமுகவுக்கு ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications