சீமானை விடுதலை செய்யக் கோரி தம்பி உயர்நீதிமன்றத்தில் வாதம்
சென்னை: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள இயக்குநர் சீமானை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவரது தம்பி ஜேம்ஸ் பீட்டர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சீமான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான இந்த நடவடிக்கையை ரத்து செய்து, சீமானை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தற்போது வக்கீல்கள் ஸ்டிரைக் நடந்து வருவதால் வக்கீல்கள் யாரும் பணிக்கு வராமல் உள்ளனர். இந்த நிலையில், சீமான் விடுதலை கோரும் மனு நேற்று நீதிபதிகள் தர்மாராவ், சுப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
வக்கீல்கள் ஸ்டிரைக் காரணமாக, சீமானின் தம்பி ஜேம்ஸ் பீட்டரே ஆஜராகி வாதாடினார்.
முன்னதாக ஜேம்ஸ் பீட்டர் தாக்கல் செய்திருந்த மனுவில்,
எனது சகோதரர் சீமான் கடந்த மாதம் 17-ந் தேதி பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடந்த கூட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பாளையங்கோட்டை போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்திய இறையாண்மைக்கும், தேசிய ஒற்றுமைக்கும் பாதகமாக பேசியதாக புதுச்சேரி போலீசாரும் கைது செய்தனர்.
கடந்த மாதம் 27-ந் தேதி சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைக்க நெல்லை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். ஏற்கனவே சீமான் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டுமென்று போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறு உத்தரவிட்டபிறகு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டது தவறானதாகும். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு அடிப்படையில் ஆராயும்போது சீமான் பேசிய பேச்சு சட்டவிரோத தடுப்பு சட்டத்தின்கீழ் வராது. விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காமலும், முழு பேச்சை ஆராயாமலும் உத்தரவிட்டிருப்பதால் அதை ரத்து செய்து சீமானை விடுதலை செய்யவேண்டும் என்று ஜேம்ஸ் பீட்டர் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்த விசாரணையை 26ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications