விஜய்காந்துடன் பேசி வருகிறோம்-இளங்கோவன்
மதுரை: வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணையும் என நம்புகிறேன். இதற்காக விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் இளங்கோவன் கூறினார்.
மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது.
கடந்த தேர்தலை விட இம்முறைந்த தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கூறி வருகிறார்கள். நாங்களும் கட்சி மேலிடத்தில் வற்புறுத்தி உள்ளோம்.
எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும், எந்தெந்த தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது குறித்தும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும்- முதல்வர் கருணாநிதியும் பேசி முடிவெடுப்பார்கள்.
விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பது குறித்து தங்கபாலுவின் நிலைப்பாடே என்னுடையதும். ஆனால் கட்சி மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் கட்டுப்படுவார்கள்.
வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணையும் என நம்புகிறேன். விஜயகாந்துடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றாலும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்த் சேர வேண்டும் என்பது காங்கிரசின் விருப்பமாகும். தேசிய உள்ளம் கொண்ட விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
பாமகவைப் பொறுத்தவரை மத்திய அமைச்சரவையில் அன்புமணி இடம் பெற்றுள்ளதால் தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.
இதற்கு முன் மூன்றாவது அணி உருவானபோது ஜெயலலிதா நேரில் சென்று கலந்து கொண்டார். இந்த அணி வலுவாக இருக்கும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதுமட்டுமல்ல, 3வது அணி கடந்தகால வரலாற்றில் உருப்படாத அணியாகவே இருந்துள்ளது என்றார் இளங்கோவன்.
தான் உண்ணாவிரதம் இருந்த பிறகு புதான் மத்திய அரசு இலங்கைக்கு மருத்துவ உதவிகளை அனுப்பியதாக ஜெயலலிதா கூறியுள்ளாரே? என்று கேட்டதற்கு பதிலளித்த இளங்கோவன்,
இலங்கை தமிழர் மீது இருந்த பற்று காரணமாக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தாரா? அல்லது மருத்துவர் அறிவுரைப்படி எடை குறைவதற்காக உண்ணாவிரதம் இருந்தாரா? என்று எனக்கு புரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications