பால் தாக்கரே சூப்பர் மனிதர்-பவார் பாராட்டு
டெல்லி: பிரதமராகும் தனது கனவை மீண்டும் ஒருமுறை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் மத்திய விவசாயத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார். இதற்காக சிவசேனாவுடன் கூட்டு சேரவும் அவர் தயாராக உள்ளார்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசின் நம்பிக்கையை கொஞ்சம் கூடப் பெறாத கட்சி சரத் பவாரின் கட்சி தான். கூட்டணியில் இருந்து கொண்டே சிவசேனையுடன் நட்பு பாராட்டி வரும் பவார் அவ்வப்போது தானே பிரதமராக வேண்டும் என்ற ஆர்வத்தையும் மறைக்காமல் வெளியில் சொல்லி காங்கிரசுக்கு எரிச்சலூட்டி வருகிறார்.
இப்போது மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தாலும் சிவசேனையுடனும் அவர் தொடர்பில் தான் உள்ளார்.
மராட்டியரான பவார் பிரதமராக வேண்டும் என்று கூறி வரும் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே, அவருக்காக பாஜக கூட்டணியை முறித்துக் கொள்ளவும் கூட முன் வந்தார்.
ஆனால், பவார்-சிவசேனைக் கூட்டணி மக்களிடையே எடுபடாது என்று தெரியவந்ததால் இருவருமே தனித்தனியே போட்டியிடுவது என்றும் தேர்தலுக்குப் பின் பவார் பிரதமராக வாய்ப்பு கிடைத்தால் அவருக்கு சேனா ஆதரவு தருவது என்றும் முடிவாகியுள்ளது.
இந் நிலையில் என்டிடிவிக்கு பவார் அளித்த பேட்டியில், சிவ சேனை ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல. பால் தாக்கரே மிகச் சிறந்த மனிதர். தனது மதவாத நிலையை சிவசேனா கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொண்டால், அந்தக் கட்சியால் இன்னும் நிறைய வெற்றிகளைப் பெற முடியும்.
ஆந்திரம், குஜராத், கர்நாடகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பிரதமர் பதவியை வகித்துவிட்டனர். எனவே, இந்த முறை மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் பிரதமராவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என என் மாநில மக்கள் விரும்புகின்றனர்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வேண்டும் என்பது சிவசேனை கட்சியின் கொள்கையாகவும் உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிபா பாட்டீலுக்கு அக் கட்சி ஆதரவு அளித்ததன் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம் என்றார் பவார்.
பாஜக- சிவ சேனை தொகுதிப் பங்கீடு:
இதற்கிடையே மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனா இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி பாஜக 26 இடங்களிலும், சிவ சேனை 22 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
முன்னதாக இரு கட்சிகளுக்கும் இடையே மகாராஷ்டிரத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைப்பது தொடர்பாக சிவசேனா ரகசிய பேச்சு நடத்தியது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications