திமுக சார்பில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிப்பதற்கு நாளையே (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள்.
இந்த விண்ணப்பங்களை வினியோகிக்கும் பணி கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. விண்ணப்பத்தின் விலை ரூ. 1,000. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ. 10,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
திமுக சார்பில் போட்டியிட சீட் கோரி ஆயிரக்கணக்கானோர் இந்த விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். மதுரை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களின் தொகுதிகளில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி போட்டியிட வேண்டும் என்று கோரி பலர் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர்.
அதே போல சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிடக் கோரியும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் நாளை வரை பெறப்படும்.
வரும் 25ம் தேதி விண்ணப்பம் செய்தவர்களிடம் நேர்காணல் நடக்கிறது. முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் இந்த நேர்காணலை நடத்தவுள்ளனர்.