சோனியா இல்லாமல் மதசார்பற்ற அரசு அமையாது: அமர்சிங்
லக்னெள: காங்கிரஸ் தலைவர் சோனியா இல்லாமல் மதசார்பற்ற அரசு அமையாது என சமாஜ்வாடி கட்சி பொது செயலாளர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் இளைஞர் அமைப்பு கூட்டம் நேற்று லக்னெளவில் நடந்தது. அதில் பங்கேற்ற அக்கட்சி பொது செயலாளர் அமர் சிங் பேசுகையில்,
மூன்றாவது அணிக்கு மதசார்பு என்பது துணி மாற்றுவது போன்றது. சோனியா இல்லாத மதசார்பற்ற அரசு அமைவது என்பது சாத்தியமில்லை. இவர்கள் தங்களது சுயநலத்துக்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். மூன்றாவது அணி இந்திய அரசியலுக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு.
இந்த கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒரு சமயம் பாஜகவுடன் கைகோர்த்தவை தான். இதனால் இவர்களை மதசார்பற்றவர்கள் என கூற முடியாது.
சந்திரபாபு நாயுடு, பாஜகவுடன் மத்தியில் 5 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி செய்தார். அவர் மதசார்பற்றவர் என்றால் குஜராத் பற்றி எரிந்த போது, ஆதரவை வாபஸ் வாங்கியிருக்கலாமே.
ஜெயலலிதாவும், தேவே கவுடாவின் நிலையும் அது தான். தேவே கவுடாவுக்கு தன் மகன் முதல்வராக இருந்தால் பாஜக மதசார்பற்ற அரசாக தெரிந்திருக்காது.
மாயாவதியும், பாஜகவுடன் இணைந்து மூன்று முறை முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். அவர் தற்போது பிரதம வேட்பாளராகிவிட்டார். தேவே கவுடா மதசார்பற்றவராகி விட்டார் என்றார் அமர் சிங்.