மாயாவதி கொடுத்த விருந்து - புறக்கணித்தது அதிமுக
டெல்லி: நான்காவது முறையாக உருவாகியுள்ள 3வது அணியின் தலைவர்களுக்கு உ.பி. முதல்வர் மாயாவதி அளித்த விருந்து நிகழ்ச்சியில் அதிமுக கலந்து கொள்ளவில்லை.
3வது அணி நான்காவது முறையாக தொடங்கப்பட்டுள்ளது. முதல் முறை தொடங்கப்பட்டது முதலே அதிமுக நிலையற்ற நிலையை கடைப்பிடித்து வருகிறது. ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டால் அடுத்த கூட்டத்தைப் புறக்கணிக்கும்.
இந்த நிலையில், நேற்று இரவு டெல்லியில் மாயாவதி அளித்த விருந்து நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்த விருந்து நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத், மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன், தேசிய செயலர் டி.ராஜா, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சார்பில் சந்திரசூடன், அபனி ராய், பார்வர்டு பிளாக் சார்பில் பிஸ்வாஸ், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கெளடா, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
3வது அணியில் புதிதாக சேரவுள்ள பிஜு ஜனதா தளத்தின் சார்பில் ஜெய் பண்டா கலந்துகொண்டார்.
அனைவரும் அதிமுக சார்பிலான பிரதிநிதி பங்கேற்பார் என எதிர்பார்த்த நிலையில் மைத்ரேயன் கலந்து கொள்ளவில்லை. கட்சி மேலிட உத்தரவுப்படியே அவர் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து மைத்ரேயனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மட்டுமே என்னை பங்கேற்க தலைமை பணித்திருக்கிறது. விருந்தில் பங்கேற்க சொல்லவில்லை என்றார்.
3வது அணியின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் மாயாவதியும், ஜெயலலிதாவும் மட்டுமே உள்ளனர். இதில் மாயாவதி, தன்னையே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என நிர்ப்பந்தித்து வருகிறார். இதனால்தான் ஜெயலலிதா அதிருப்தியுடன் இருப்பதாக தெரிகிறது.
இதன் காரணமாகவே மாயாவதி அளித்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டாம் என மைத்ரேயனுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக கருதப்படுகிறது.
முன்னதாக ஆலோசனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 3வது அணி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் மைத்ரேன் கலந்து கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், காங்கிரஸ், பாஜக அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியை அமைப்பதே இந்த அணியின் முக்கியப் பணியாகும். நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலத் திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிப்பது இதன் குறிக்கோள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications