நேரு தொகுதியில் காமெடியனை நிறுத்தும் காங்.
லக்னோ: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு போட்டியிட்டு வென்ற பூல்பூர் தொகுதியில் காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவத்சவை நிறுத்த காங்கிரஸ் கட்சி யோசித்து வருகிறதாம்.
உ.பி. மாநிலம் பூல்பூர் தொகுதிக்கு தனிப்பெருமை உண்டு. இங்குதான் நேரு போட்டியிட்டு வென்று பிரதமரானார். தற்போது இந்தத் தொகுதி அலகாபாத்துடன் இணைக்கப்பட்டு அலகாபாத்-பூல்பூர் என அழைக்கப்படுகிறது.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டிவி நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவத்சவை நிறுத்த காங்கிரஸ் யோசித்து வருகிறதாம்.
இதுகுறித்து ராஜூ கூறுகையில், உ.பி மாநில காங்கிரஸ் தலைவர் ரீத்தா பகுகுணா அலகாபாத்-பூல்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தொகுதியின் முழு விவரம், பெருமைகளையும் என்னிடம் அவர் எடுத்துரைத்துள்ளார்.
இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். ரீத்தா ஜோக் அடிக்கிறார் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். என்னை விட நன்றாக நகைச்சுவை செய்கிறாரே என்று கூட நினைத்தேன். ஆனால் சீரியஸாகாத்தான் கேட்கிறேன் என்றார் ரீத்தா. எனவே நானும் இதை சீரியஸாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.
மார்ச் 13ம் தேதி ரீத்தா பகுகுணா என்னை டெல்லிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சோனியா காந்தியை சந்தித்தேன். என்னை நன்றாகத் தெரியுமே என்றார் சோனியா. நானும், சோனியாவின் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்கும் என்றேன்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது சோனியா என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் எல்லாவற்றையும் ராஜுவிடம் விளக்கி விட்டதாக சோனியாவிடம் ரீத்தா கூறினார் என்றார்.