இன்னும் மருத்துவமனையில் சமரவீரா-மெண்டிஸ்
கொழும்பு: லாகூர் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஏழு இலங்கை வீரர்களில் சமரவீரா மற்றும் மெண்டிஸ் ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மாதம் 3ம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாட சென்ற இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 போலீசார் பலியானார்கள். ஏழு இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து தொடர் ரத்து செய்யப்பட்டு இலங்கை வீரர்கள் உடனடியாக நாடு திரும்பினர்.
தாக்குதல் சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் சமரவீரா மற்றும் மெண்டிஸ் ஆகியோர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர்கள் இருவரும் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்களின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
இது குறித்து இலங்கை விளையாட்டு அமைச்சகத்தின் தலைமை டாக்டர் கீதன்ஜனா மெண்டிஸ் கூறுகையில், அவர்கள் இருவரும் நன்றாக தேறி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு தொடர்ந்து கவனமாக மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்பிவிடுவார்கள்.
சமரவீராவின் இடது தொடையில் பாய்ந்திருந்த துப்பாக்கி குண்டு அறுவை சிகிச்சைக்கு பின் நீக்கப்பட்டுவிட்டது. மெண்டிசின் தலையில் ஏற்பட்டுள்ள காயம் ஆறிவருகிறது. இவர்களுக்கென பிரத்யேக உடல்அசைவு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னும் பல நாட்களுக்கு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்றார் டாக்டர் கீதன்ஜனா மெண்டிஸ்.
காயமடையாத இலங்கை வீரர்கள் அடுத்த வாரம் பயிற்சியை துவக்கவிருக்கின்றனர்.