சென்னை கிரில் கொள்ளையர்கள் கொல்கத்தாவில் கைது
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஜன்னல் கிரில்களை கழற்றி உள்ளே புகுந்து திருடி வந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இக்கும்பலைச் சேர்ந்த தலைவன் கொல்கத்தாவில் பிடிபட்டான்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் ஜன்னல் கிரில் கம்பிகளை அப்படியே கழற்றி எடுத்து உள்ளே புகுந்து திருடுவது அதிகமாக உள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்தன. இதையடுத்து போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வேட்டையில், முத்தாஸ் அலி, அபுபக்கர் உள்ளிட்ட 3 பேர் சிக்கினர். இந்தக் கும்பலின் தலைவனாக காசிம் என்பவன் செயல்பட்டு வந்தான்.
காசிமும், அவனது கூட்டாளி யாக்கூப் அலி என்பவனும் கொல்கத்தாவுக்குத் தப்பி விட்டனர்.
இந்தக் கும்பலின் திருட்டு தொழில்நுட்பம் வித்தியாசமானது. பகல் நேரங்களில் ஒவ்வொரு ஏரியாவாக பூ ஜாடி விற்பவர்கள் போல செல்வார்களாம். அப்போது வீடுகளை நோட்டமிட்டு வைத்துக் கொண்டு இரவு அங்கு சென்று ஜன்னல் கம்பிகளை கழற்றி வீடு புகுந்து திருடுவார்களாம்.
திருட்டின் மூலம் கிடைத்த பணம், நகைகளை காசிம் கொண்டு செல்வது வழக்கமாம். தற்போது கூட திருட்டு நகைகளுடன்தான் காசி்ம் கொல்கத்தாவுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா விரைந்த போலீஸ் தனிப்படை தற்போது காசிமையும் வளைத்துப் பிடித்து விட்டது. அவனுக்கு மொத்தம் 16 இடங்களில் நடந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
போலீஸார் அவனை விரைவில் சென்னைக்கு கொண்டு வரவுள்ளனர்.