திமுக தேர்தல் பிரச்சாரத்தில் கிராமிய கலைஞர்கள்
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கிராமிய கலைஞர்களை திமுக பயன்படுத்த உள்ளதாக அக் கட்சியின் ராஜ்யசபா எம்பி கனிமொழி கூறினார்.
பிரச்சார திட்டத்தில் திமுக அரசின் சாதனைகளான இலவச கலர் டிவி, ஒரு ரூபாயுக்கு அரிசி போன்ற சாதனைகள் முன்வைக்கப்பட இருக்கின்றன.
இத்திட்டங்களை கிராமப்புற மக்கள் மத்தியில் விரைவில் கொண்டு செல்ல திமுக அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறது. அது கிராமிய கலைஞர்களை பயன்படுத்தி நாட்டுப்புற பாடல்கள் மூலம் திமுகவின் சாதனைகளை விளக்கும் வகையில் அமையும் என தெரிகிறது.
இது நாடாளுமன்ற தேர்தலில் கிராம மக்களின் ஓட்டுவங்கிகளை தங்கள் பக்கம் திருப்ப கைகொடுக்கும் என அவர்கள் கருதுகிறார்கள். பிரச்சாரத்தில் சேது சமுத்திர திட்டம், இட ஒதுக்கீடு, தமிழை ஆட்சி மொழியாக்கியது போன்ற சாதனைகளும் இடம்பெறுகின்றன்.
கிராமிய கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவது திமுகவுக்கு புதிது ஒன்றும் அல்ல. ஏற்கனவே திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி பல முறை நாட்டுப்புற கலைஞர்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
இது குறித்து கனிமொழி கூறுகையில், தேர்தல் பிரசாரத்தில் கிராமிய கலைஞர்களை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம். விரைவில் இதுபற்றி அறிவிப்போம் என்றார்.