நாளை திமுகவில் இணையும் எல்ஜி-செஞ்சி
சென்னை: போட்டி மதிமுக நடத்தி வரும் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் நாளை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கட்சியை திமுகவுடன் இணைத்துவிட்டு அவர்களும் திமுகவில் இணைகின்றனர்.
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் மதிமுகவை விட்டு இருவரும் வெளியேறினர். இவர்களுடன் சில நூறு தொண்டர்கள் மட்டுமே கட்சியை விட்டு விலகினர். ஆனாலும் போட்டி மதிமுகவாக திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.
இந் நிலையில் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்க வசதியாக இப்போது இருவரும் திமுகவில் இணைகின்றனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணையும் இவர்கள் கட்சியையும் இணைக்கின்றனர்.
இதையொட்டி நகர் முழுவதும் எல்.ஜி, செஞ்சி ஆகியோரின் படங்களுடன் ''எங்களது பொது வாழ்க்கைப் பயணம் கறைபடியாமல் தொடர சங்கமம் ஆகிறோம், கலைஞர் அவர்களின் கரம்பற்றுகின்றோம்'' என்ற வாசகங்களுடன் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
'முறைப்படி' இணையும் மு.கண்ணப்பன்:
இதற்கிடையே மதிமுகவிலிருந்து விலகி விட்ட அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனும், முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.சுப்ரமணியமும் வரும் 23ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் முறைப்படி திமுகவில் இணைகின்றனர்.
முதல்வர் கருணாநிதியை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தது தொடர்பாக கண்ணப்பனுக்கும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த கண்ணப்பன் மதிமுகவை விட்டு விலகினார். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் டி.கே.சுப்ரமணியமும் ராஜினாமா செய்தார்.
இவர்கள் இருவரும் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், வருகிற 23ம் தேதி திமுகவில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து சுப்ரமணியம் கூறுகையில், 23ம் தேதி திமுகவில் இணையலாம் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அதன்படி 23ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், கண்ணப்பனும், நானும், எங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகிறோம்.
பல்வேறு மாவட்டச் செயலாளர்களும் மதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுடனும் பேச்சு நடந்து வருகிறது என்றார் சுப்ரமணியம்.












Click it and Unblock the Notifications