மூளைச் சாவு-மதுரை ஆசிரியர் உடல் உறுப்புகள் தானம்
மதுரை: விபத்தில் சிக்கி மூளைச் சாவை சந்தித்த மதுரை ஆசிரியரின் உடல் உறுப்புகள், அவரது குடும்பத்தினரால் தானம் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் நோயாளிகள் பலரின் வாழ்வில் புது வசந்தம் வீசத் துவங்கியுள்ளது.
மதுரை மேலூரை சேர்ந்த சாமிநாதன் என்பவர் சிவகங்கை சாலையில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 12ம் தேதி பள்ளிக்கு பைக்கில் சென்ற இவர் எதிர்பாராவிதமாக விபத்து ஒன்றில் சிக்கி கொண்டார். இதையடுத்து அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. அப்போது அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கசிவு அதிகரித்ததை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் மூளைசாவு அடைந்தார். அவரது குடும்பத்தினரிடம் நிலைமையை விளக்கிய டாகடர்கள் உடல் உறுப்பை தானமாக அளித்தால் பலருக்கு புதிய வாழ்க்கை அமைய வழிவகுக்கலாம் என எடுத்து கூறினர்.
இதற்கு அவரது குடும்ப உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சாமிநாதனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு இதய வால்வுகள் மற்றும் இரண்டு கண்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.
அவரது கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது. ஒரு சிறுநீரகம் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது.
மற்றொரு சிறுநீரகம் சென்னை அரசு மருத்துவமனையில் இருந்த நோயாளி ஒருவருக்கும், கல்லீரல் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வரும் நோயாளிக்கும் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த உறுப்புகள் மதுரையிலிருந்துஉடனடியாக விமானம் மூலம் சென்னை பறந்தது.