அதிமுகவுக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆதரவு
மதுரை: வரும் மக்களவைத் தேர்தலி்ல் மூவேந்தர் முன்னேறறக் கழகம் போட்டியிடாது என்றும், அதிமுகவை ஆதரிக்கப் போவதாகவும் அக் கட்சியின் தலைவர் டாக்டர். சேதுராமன் கூறினார்.
மதுரையில் நடந்த அக் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அவர், நாங்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் சீட் கேட்கவில்லை. அதே நேரத்தில் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்றார்.
கார்த்திக் ஆதரவு யாருக்கு?:
இதற்கிடையே நடிகரும், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக் : லோக்சபா தேர்தலில் தனது சமூகத்தை (முக்குலத்தோர்) ஆதரிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றார்.
நெல்லை மாவட்டம் சிவகிரியில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர்,
நாடாளும் மக்கள் கட்சி என்பது நாட்டை ஆளும் கட்சி அல்ல. நாட்டை ஆள்பவர்களை முடிவு செய்யும் கட்சியாகும். மக்கள் செல்வாக்கு இல்லாமல் ஆட்சி பீடத்தில் யாரும் அமர முடியாது. மக்களை நம்பி தனியாக கட்சி தொடங்கியுள்ளேன். மக்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக பேசுபவர்களை மன்னிக்க முடியாது. என்னை வம்புக்கு இழுத்தால் சிங்கமாக எழுவேன்.
என்னை பலகீனமானவன் என நினைத்தால் அதை மக்கள் பொய்யாக்கி விடுவர். தற்போது அரசியல்வாதிகளிடம் உள்ள பணத்தில் மூன்றில் 2 பங்கு மக்களுடையது. அந்த இரண்டு பங்கு பணத்தை மக்கள் பணிகளுக்கு செலவு செய்தால் வறுமை ஓழியும்.
நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக அணுகி உள்ளன. நாங்கள் விதிக்கும் நிபந்தனைகளை எந்த கட்சி ஏற்கிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.
நமது இனத்தை ஆதரிக்கும் கட்சிக்கே ஆதரவு அளிக்கப்படும். யாருக்கு ஆதரவு என்பதை இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பேன் என்றார்.
பெரும்பாலும் அவரது ஆதரவு அதிமுகவுக்கே கிடைக்கும் என்று தெரிகிறது. முக்குலத்தோர் சமூக இளைஞர்களிடையே கார்த்திக்கு பெரும் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications