3வது அணி: பிரதமர் யார்-தேர்தலுக்கு பின் முடிவு-ஜெ

இலங்கை தமிழர்களுக்காக அதிமுக சார்பில் திரட்டப்பட்ட உதவி நிதியை இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கினார்.
இதற்காக டெல்லியில் இருந்து பிரத்யேகமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மண்டலக் குழுத் தலைவர் ஃப்ரான்சுவா ஸ்டாம் சென்னை வந்திருந்தார்.
ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் ஸ்டாம் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் 2 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 391 ரூபாய் மற்றும் 50 காசுக்கான வரைவோலைகளை ஜெயலலிதா அளித்தார்.
இந்த நிதியில் அதிமுக சார்பில் ரூ. 1 கோடியும், தமிழகம் முழுவதும் திரட்டப்பட்ட நிதி ரூ. 1 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 391 ரூபாய் மற்றும் 50 காசுகளும் அடக்கம்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேந்திர ஓபராயும் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை ஜெயலலிதா சந்தித்தார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், ஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு ..
கேள்வி: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அளித்த விருந்தில் அதிமுக பங்கேற்கவில்லையே?
ஜெ.: இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளிதான் இதற்கு காரணம்.
கே: 3வது அணி சார்பில் பிரதமராக யார் வருவார்கள்?
ஜெ: தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் யார் பிரதமர் என்பதை முடிவு செய்ய முடியும். 2004ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மன்மோகன் சிங் தான் பிரதமர் என்று யாரும் அவரை முன்னிறுத்தவில்லை. தேர்தல் முடிந்த பிறகு தான் அவர் பிரதமரானார்.
கே: மாயாவதி, சரத்பவார் ஆகியோர் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறதே? இதில் அதிமுகவின் நிலை என்ன?
ஜெ.: எங்களை பொறுத்தவரை அதிமுக தரப்பில் இருந்து எந்த அபிலாஷைகளையும் வெளியிடவில்லை. வேறு சில கட்சிகள் அவர்களுடைய அபிலாஷைகளை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் ஏதும் தவறு இல்லை.
வாய்ப்பு இருப்பவர்கள் தரப்பில் இருந்து பிரதமர் பதவிக்கு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள். அதனை வெளியிடுவதில் எந்த தவறுமில்லை. யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆசையை வெளிப்படுத்தலாம். தவறில்லை.
ஆனால், இந்த விஷயத்தில் நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. யார் பிரதமர், அவரை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.
இப்போது அதிமுகவை பொறுத்த வரை எங்கள் முழு கவனமும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் தான் இருக்கிறது.
கே: உங்கள் அரசியல் அனுபவம், அந்தஸ்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீங்கள் பிரதமர் பதவிக்கு வரலாமே? அதிமுக உங்களை முன்னிறுத்துமா?
ஜெ.: உங்கள் கருத்துக்கு நன்றி. இது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
கே: பாமக தரப்பில் இருந்து யாரும் உங்களுடன் பேசிக் கொண்டிருக் கிறார்களா?
ஜெ.: இதனை நீங்கள் அவர்களிடமே கேளுங்கள் என்றார் ஜெயலலிதா.
பஸ்பமாகிவிடுவீர்கள்...
முன்னதாக 3வது அணி குறித்து முதல்வர் கருணாநிதி விமர்சித்திருப்பது குறித்து ஜெயலலிதா கருத்து தெரிவிக்கையில்,
காங்கிரஸ், பாஜக அல்லாத அணிக்கு 3வது அணி என்று பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பெயர் சூட்டியுள்ளன. ஆனால் இந்த அணியில் உள்ளவர்களோ இதனை மாற்று அணி என்று கூறுகிறார்கள்.
இந்த அணியை முதல்வர் கருணாநிதி 3வது கண் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நான் பதில் அளிக்க விரும்புகிறேன்.
3வது கண் சிவபெருமானின் நெற்றிக் கண்ணாகும். முதல்வருக்கு நான் சொல்லிக் கொள்வேன். இந்த நெற்றிக் கண் மூடி இருக்கும் வரை தான் தவறு செய்தவர்களுக்கு பாதுகாப்பு. 3வது கண்ணை திறந்தால் எதிரே உள்ளவர்கள் எரிந்து பஸ்பமாகிவிடுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications