நாயுடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க யாகம் நடத்திய ரோஜா
தெலுங்கு தேச மகளிர் அணித் தலைவியாக உள்ள ரோஜா, சந்திரகிரி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதி முழுக்க சூறாவளி பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
பிரசாரத்தின் ஒரு பகுதியாக நாயுடு மீண்டும் முதல்வராக வேண்டி கொட்டாலா என்ற கிராமத்தில் யாகம் ஒன்றை நடத்தினார் ரோஜா.
இதுகுறித்து ரோஜா கூறுகையில், சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வர் பதவியில் அமர வேண்டும். இதற்காகத்தான் இந்த யாகம். இந்த யாகத்தால் எனக்கு புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் கிடைத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல்தான். விலைவாசியும் கடுமையாக உள்ளது. விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் தெலுங்கு தேசம் கட்சி வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது என்றார் ரோஜா.
சமீபத்தில் கிராமம் ஒன்றில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி அசத்தினார் ரோஜா. இதனால் தேர்தல் ஆணையம் இவருக்கு நோட்டீஸ் விட்டது நினைவிருக்கலாம்.