பிட் அடித்து சிக்கிய மாணவன் தற்கொலை மாடியிலிருந்து குதித்து தற்கொலை
மும்பை: பிட் அடித்து பிடிபட்டதால் அடுத்த பரீட்சையை எழுத முடியாதே என்ற கவலையில் மும்பையைச் சேர்ந்த மாணவர், புனேவில் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை கிழக்கு கட்கோபரைச் சேர்ந்தவர் பவி தேசாய். 16 வயதாகும் இவர் புனே, கரோடியா நகரில் உள்ள பள்ளியில் பத்தாவது வகுப்பு படித்து வந்தார்.
தற்போது நடந்து வரும் அரசு பொதுத் தேர்வில் கலந்து கொண்டுள்ளார் பவி. நேற்று புவியியல் தேர்வு நடந்தது. அப்போது பிட் அடித்துள்ளார். இதையடுத்து தேர்வுக் கண்காணிப்பாளர் பவியைப் பிடித்து விட்டார்.
இதையடுத்து பள்ளி முதல்வர் சரளா நாகேந்திரன், பவியின் ஹால் டிக்கெட்டைப் பறித்துக் கொண்டார். புவியியல் தேர்வை மட்டும் எழுத அனுமதித்தார்.
இதனால் அடுத்த தேர்வு எழுத முடியாதே என்று பவி அதிர்ச்சி அடைந்தார். பரீட்சை முடிந்து வீடு திரும்பிய பவி, தான் குடியிருந்து வந்த கட்டடத்தின் 2வது மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார்.
படுகாயமடைந்த நிலையில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்தார்.