ராணுவம் மீது புலிகள் தற்கொலைப் படைத் தாக்குதல்
கொழும்பு: வன்னிப் பகுதியில் ராணுவ சீருடையில் வந்து விடுதலைப் புலிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால் இதில் ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை என்று ராணுவம் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. ராணுவத்தின் முன்னெடுப்புகளை விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு தடுத்து வருகின்றனர்.
இதனால் முன்பு போல வேகமாக முன்னேற முடியாமல் தத்தளிக்கிறது இலங்கை ராணுவம்.
இந்த நிலையில் தற்கொலைப் படைத் தாக்குதல்களையும் புலிகள் அதிகரித்து வருகின்றனர்.
நேற்று ராணுவ வீரர்களைக் குறி வைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில்,
புதுக்குடியிருப்புப் பகுதியில், ராணுவ நிலை ஒன்றை நோக்கி ராணுவ சீருடையில் ஒரு நபர் வந்தார். இதையடுத்து அவரைப் பரிசோதிக்க ஒரு ராணுவ வீரர் சென்றார். அவர் நெருங்கி வந்தபோது அந்த மர்ம நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.
அதிர்ஷ்டவசமாக இதில் ராணுவ தரப்புக்கு எந்த உயிர்ச்சேதமும் இல்லை என்றார்.
இன்னொரு பகுதியில், 14 விடுதலைப் புலிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் நாணயக்காரா தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் விடுதலைப் புலிகள் தற்கொலைப் படைத் தாக்குதல்களை அதிகரிக்க ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications