ஐகோர்ட் மோதல்: கூடுதல் கமிஷனர் உள்பட 2 பேர் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டவர் சென்னை மாநகர கூடுதல் ஆணையர் விஸ்வநாதன்தான் என்று தமிழக அரசு இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து கூடுதல் ஆணையர் மற்றும் இணை ஆணையர் ராமசுப்ரமணியம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட பெரும் மோதலைத் தொடர்ந்து வக்கீல்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களைத் தாக்க உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகள் அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். கமிஷனர் உள்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.
ஆனால் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் போலீஸ் துறையினர் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் குதிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டது.
இதை நிரூபிக்கும் வகையில் போலீஸ் நலச் சங்கம் என்ற பெயரில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் பெரும் கலவரத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி சென்னை காவல் நிலையங்களில் போலீஸாரிடம் பிட் நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றக் கலவரம் தொடர்பான வழக்கு நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஒரு விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீ்ல்கள் மோதலில் இறங்கியதைத் தொடர்ந்து அவர்கள் மீது தடியடி நடத்த கூடுதல் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். ஆனால் வக்கீல்கள் போலீஸ் நிலையத்தை தீவைத்து எரித்ததால் மீண்டும் ஒரு முறை தடியடி நடத்த உத்தரவிடப்பட்டது.
வக்கீல்கள் வருகிற 19ம் தேதி சென்னையில் பேரணி நடத்தவுள்ளனர். அப்போது பெரும் கலவரம் வெடிக்கும் என அஞ்சுகிறோம். எனவே அதற்குத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு வக்கீல்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைதியான முறையில் பேரணி நடைபெறும் என அவர்கள் நீதிபதிகளுக்கு உறுதி அளித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பெஞ்ச், முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. தடியடி நடத்த உத்தரவிட்ட கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்ரமணியம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வக்கீல்கள் உடனடியாக அதை கைவிட்டு விட்டு பணிக்குத் திரும்புமாறும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
சந்தோஷமாக ஏற்கிறேன் - விஸ்வநாதன்
தன்னை உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால், பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்றால் சந்தோஷமாக இந்தத் தீர்ப்பை ஏற்கிறேன் என்றார் அவர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இணை ஆணையர் ராமசுப்ரமணி, வட சென்னை இணை ஆணையராக இருந்து வந்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அவர் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
இரு உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications