ஹால் டிக்கெட் குழப்பம்-10ம் வகுப்பு மாணவர்கள் திணறல்
சென்னை: பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களின் ஹால் டிக்கெட்டுகளில் பெயர்கள், இனிஷியல், தேர்வு மையம் உள்ளிட்டவை மாறிப் போயிருப்பதால் மாணவர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வரும் 25-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. ரெகுலர் மாணவர்கள் தவிர பள்ளிகளில் படிக்காமல் தனித்தேர்வர்களாக எழுதும் மாணவ-மாணவிகள் 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு வழங்கப்பட்ட ஹால்டிக்கெட்டுகளில் ஏகப்பட்ட குழப்பங்கள். பலருக்கு பெயர்கள் மாறிப் போயுள்ளன. சிலருக்கு இனிஷயல் தவறாக வந்துள்ளது. பாடப் பிரிவுகள் தவறாக உள்ளன. தேர்வு மையங்களும் மாறிப் போயுள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று காலை குவிந்தனர்.
அங்கு திறக்கப்பட்டுள்ள 4 கவுண்ட்டர்களில் விளக்கம் கேட்க மணிக்கணக்கில் காத்திருந்தனர். காலை 10 மணிக்கு வந்த மாணவர்கள் பகல் ஒரு மணி வரையும் கூட சரியான விளக்கம் கிடைக்காமல் குமுறலுக்கு ஆளானார்கள்.
பூந்தமல்லி குமணஞ்சாவடியைச் சேர்ந்த எம்.சித்தார்த்தன் என்ற மாணவர் அவர் சார்ந்த மாவட்டமான திருவள்ளூரில் உள்ள ஹால்டிக்கெட் வழங்கும் மையத்தில் கேட்டபோது அவர்கள் டி.பி.ஐ சென்று கேளுங்கள் என்று கூறிவிட்டனர்.
இதனால் அவர் அரசு தேர்வுத்துறைக்கு வந்து விளக்கம் கேட்டார். அதற்கு அவருடைய பெயர் காஞ்சீபுரத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஒரு மாணவரின் பெயர் அரவிந்தன். ஆனால், அவனது பெயர் அரிவிந்தன் என்று ஹால்டிக்கெட்டில் தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. பிரபா என்ற மாணவிக்கு இனிஷியல் இல்லை.
வினோத் என்ற மாணவரின் பெயரை வினோஜ் என மாற்றி விட்டனர். டி.கே.சுபாஷினி என்ற மாணவிக்கு டி.சுபாஷினி என்று போடடுள்ளனர்.
மணிக்கண்ணன் என்ற மாணவருக்கு அவருடைய பெயர் தவறுதலாக மணிகண்டன் என்று அச்சாகி இருந்தது. அது மட்டுமல்ல ஒரு மாணவர், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த மாணவருக்கு சமூக அறிவியல் பாடம் விடுபட்டுள்ளது. என். சரவணன் என்ற மாணவருக்கு பிறந்த தேதி தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது.
காத்துக் கிடந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கூறுகையில், 3 மணி நேரமாக காத்துக் கிடக்கிறோம். ஆனால், தேர்வுத்துறை அதிகாரிகள் எங்களுக்கு சரியான பதில் தரவில்லை. தவறான தகவலால் மாவட்டம் விட்டு மாவட்டம் அலைவதாலும் எங்களுக்கு பயணச் செலவுக்கும் சிரமப்படுகிறோம்.
சாப்பாட்டுச் செலவுக்கு காசில்லாமல் மதியம் சாப்பிடவில்லை. எனவே, இதுபோன்ற தவறுகள் வராமல் தடுக்க மாணவர்கள் பெயர்களையும் அவர்களின் ஹால்டிக்கெட்டுகள் வாங்க வேண்டிய தேர்வு மையத்தையும் இணையதளத்தில் வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
தேர்வுத் துறை சற்று கவனமாக இருந்தால் நல்லது.