For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிராபிக் ராமசாமியை தாக்கிய வக்கீல்கள்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: உயர்நீதிமன்ற வக்கீல்கள் அனுமதி இல்லாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த பொது நல சேவகர் டிராபிக் ராமசாமியை வக்கீல்கள் அடித்து உதைத்தனர். இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் அருகே பெரிய பந்தலைப் போட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் வக்கீல்கள்.

இந்த நிலையில் டிராபிக் ராமசாமி ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்படாத இடத்தில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்து வரும் வக்கீல்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதற்கு போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் ஆஜரவாதற்காக ராமசாமி கோர்ட்டுக்கு வந்தார்.

அப்போது வக்கீல்கள் சிலர் அவரைச் சூழ்ந்து கொண்டனர். ஒருவர் ராமசாமியைத் தாக்கினார். அவர்களிடமிருந்து ஒரு வழியாக மீண்ட ராமசாமி, நேராக போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு ஒரு புகார் தந்தி அனுப்பினார்.

அதன் பேரில் விசாரணை நடத்த ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தான் தாக்கப்பட்டது குறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில்,

வழக்கு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்திற்கு வந்தேன். ஒரு பத்து பேர் என்னை சூழ்ந்து கொண்டனர். ஒருவர் எனது முதுகில் அடித்தார். பின்னர் ஒரு வக்கீல் பைக்கைக் கொண்டு என் மீது மோத வந்தார்.

இதுகுறித்து தலைமை நீதிபதி, போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கும் புகார் தந்தி அனுப்பியுள்ளேன். என்னைத் தாக்கிய பத்து வக்கீல்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் டிராபிக் ராமசாமி.

பொது நல சேவகரான டிராபிக் ராமசாமி பல்வேறு பொது நலன் மனுக்களைப் போட்டு பல முக்கிய உத்தரவுகளை உயர்நீதிமன்றத்தின் மூலம் வாங்கியவர்.

கட்டாய ஹெல்மட் உள்பட பல முக்கிய வழக்குகளைத் தொடர்ந்தவர் இவரே. இவர் வக்கீல் வைத்து வாதாட மாட்டார். தானே வாதாடுவார். கை நிறைய பேப்பரும், பை நிறைய பேனாக்களுமாக காணப்படுவார்.

பலமுறை இவர் பலரால் தாக்கப்பட்டுள்ளார். உச்சகட்டமாக சமீபத்தில் வீடு புகுந்து இவரை சிலர் அடித்து உதைத்தனர். சமீபத்தில் போலீஸாரும் இவரை திடீரெனக் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற வக்கீல்கள் இவரைத் தாக்கியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X