இனி நீதிபதிகளை யுவர் ஆனர் என கூப்பிட மாட்டோம்: வக்கீல்கள்
சென்னை: இனிமேல் நீதிபதிகளை யுவர் ஆனர், மை லார்ட் என கூப்பிட மாட்டோம். திரு என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்துவோம் என சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களுக்கு சமீபத்தில் தலைமை நீதிபதி கோகலே பணிக்குத் திரும்புமாறு கண்டிப்பு கலந்த கோரிக்கையை விடுத்தார். இதனால் வக்கீல்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையடுத்து நீதிபதிகளை இனிமேல் பெயரைச் சொல்லியோ அல்லது மிஸ்டர் என்ற அடை மொழியை மட்டுமோ பயன்படுத்தி அழைப்போம். யுவர் ஆனர், மை லார்ட் போன்ற வார்த்தைகளை இனி பயன்படுத்த மாட்டோம் என வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் மற்றும் பல்வேறு வக்கீல்கள் சங்கங்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் கூறுகையில், கோர்ட்டுகளில் ஆஜராக வேண்டும் என எங்களுக்கு அறிவிக்கை விடப்பட்டுள்ளது. இது மிரட்டல். இதை நாங்கள் நீதிபதிகளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
எங்களை நீதிபதிகள் மிரட்டியிருப்பதால், நாங்களும் இனிமேல் யுவர் ஆனர், மை லார்ட் என்று அழைக்க மாட்டோம். மிஸ்டர் என்று மட்டும் சேர்த்து கூப்பிடப் போகிறோம் என்றார்.
இந்த ஆண்டில் இதுவரை சென்னை உயர்நீதிமன்றம் மொத்தமே 9 நாட்கள்தான் இயங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.