தமிழகம்-எஸ்எஸ்எல்சி தேர்வெழுதும் 137 கைதிகள்
நெல்லை: தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு எழுத 137 கைதிகள் சிறையில் மும்முரமாக படித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு வருகிற 25ம் தேதி தொடங்குகிறது. இத்தேர்வை சுமார் 8.42 மாணவர்கள் எழுத இருக்கின்றனர். இவர்கள் தேர்வு அதே நாளில் தமிழகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 137 கைதிகளும் தேர்வு எழுதவுள்ளனர்.
கையும் களவுமாக பிடிபட்ட இவர்கள் சிறையில் தற்போது புத்தகமும், கையுமாக உலா வருகின்றனர். சிறை என்பது தண்டனைக்குரியது அல்லது அல்ல மனிதனை மாற்றும் ஒரு பள்ளி என்பது சரியாகி வருகிறது.
பாளை மத்திய சிறையில் 32 கைதிகளும், மதுரை சிறையில் 35 மற்றும் சென்னை புழல் சிறையில் 17 பேரும் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர். இதை வேலூர், கோவை, சேலம் ஆகிய சிறையிலும் சில கைதிகள் தேர்வு எழுத இருக்கிறார்கள். இவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், கையேடுகள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை சில தொண்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
தேர்வு எழுத உள்ளவர்களில் ஆயுள் தண்டனை கைதிகள், 7 மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் அடங்குவர். பாளை சிறையில் பிஏ, பிஎஸ்சி, எம்ஏ, எம்.பில் ஆகிய பட்டபடிப்புகளை 50க்கும் மேற்பட்டோர் தொலை தொடர்பு கல்வி இயக்கங்கள் மூலம் படித்து வருகின்றனர். இவர்களுக்கு சிறைக்குள்ளேதான் தேர்வு நடப்பது வழக்கம்.
அதுபோல் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் கைதிகளுக்கும் சிறைக்குள்ளேயே தேர்வு மையம் ஏற்படுத்தி தரவேண்டும் என சிறை துறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இவர்களுக்கான தேர்வு மையத்தை சிறைக்கு வெளியே அமைப்பதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.