லண்டனில் இனவெறி-சீக்கிய கோயிலுக்கு தீ
லண்டன்: லண்டனில் உள்ள குருதுவாரா ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இது இனவெறி தாக்குதலாக இருக்கும் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு லண்டனில் உள்ள ஹார்லி குரவ் பகுதியில் குருதுவாரா சிங் சங்கத் என்று சீக்கியர்களின் கோயில் உள்ளது. 1979ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இந்த குருதுவாராவுக்குள் நுழைந்த ஒருவன் தீ வைத்துவிட்டு, தப்பி ஓடியுள்ளான். அவன் ஓடுவதை அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் பார்த்துள்ளார். பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.
இந்த செய்தி லண்டன் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மத்தியில் விறுவிறுவென பரவ அனைவரும் அங்கு வந்து குவிய துவங்கினர். குருதுவாரா எரிவதை கண்ட சில சீக்கியர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
இது தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.