பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிக்க செபி முடிவு!
மும்பை: பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி முடிவு செய்துள்ளது.
இந்திய பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் காலை 9.55-க்குத் துவங்கி, 3.30க்கு முடிவடைகிறது. ஆனால் உலக பங்குச் சந்தைகளின் நேரம் பெரும்பாலும், இந்திய நேரத்துக்கு முன்பாகவே, பின்பாகவோ அமைந்துள்ளன.
உதாரணத்துக்கு அமெரிக்க - ஐரோப்பிய சந்தைகள் பல மணிநேரம் முன்னதாகவும், ஆசிய நாடுகளின் முக்கியப் பங்குச் சந்தைகள் நேரம் சில மணிநேரம் தாமதமாகவும் உள்ளன.
இந்த நேர ஏற்றத் தாழ்வுகளால், இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வோரு்க்கு பல முக்கிய தகவல்கள் தெரியாமலேயே போகின்றன. சமயத்தில் இந்த தகவல்கள் சந்தையை நிர்ணயிக்கும் சக்திகளாகவும் உள்ளன. இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டே ஐரோப்பிய நாட்டு சந்தைகள் சில 23 மணிநேரம் இயங்கும் தன்மை கொண்டவைகளாக உள்ளன.
ஒரு மணிநேரம் மட்டும்தான் இந்த சந்தைகளில் பிரேக் இருக்கும். இவ்வளவு நீண்ட நேரம் சந்தை இயங்குவதால், பல முதலீட்டாளர்களின் இடர்பாடுகள் குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
எனவே இந்தியப் பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தையும் நீட்டிக்க செபி முடிவு செய்துள்ளது. தனது முடிவு குறித்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அனைவரிடமும் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது செபி.
அனைவரது கருத்துக்களையும் கேட்ட பின்னர், அவர்களின் விருப்பத்துக்கேற்ப வர்த்தக நேரம் நீட்டிக்கப்படும் என செபி அறிவித்துள்ளது.