உபி-55, பிகார்-26: காங்கிரஸ் தனித்துப் போட்டி
டெல்லி: பிகாரில் வெறும் 3 இடங்கள் மட்டுமே தரப்பட்டு லாலு-பாஸ்வானால் கேவலப்படுத்தப்பட்ட காங்கிரஸ் அந்த மாநிலத்தில் 26 தொகுதிகளி்ல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சீட் மறுக்கப்பட்ட அவரது மச்சான் பப்பு யாதவ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளார். இதனால் லாலு-காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ளது.
பிகாரில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன. இதில் 25 தொகுதிகளில் லாலுவின் கட்சியும் 12 இடங்களில் மத்திய அமைச்சர் ராம் விவாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தியும் போட்டியிடுகின்றன. காங்கிரசுக்கு 3 இடங்களை மட்டும் இவர்கள் ஒதுக்கினர்.
இதையடுத்து லாலுவுக்கு பதிலடி கொடுக்க அவரது கட்சியி்ன் அதிருப்தியாளர்களுக்கு காங்கிரஸ் வலைவீசி வருகிறது. இதில் லாலு கட்சியின் எம்பியான கிரிதாரி யாதவ், ரமணி ராம் ஆகியோர் ஆர்ஜேயிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளனர். இதனால் லாலுவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான மோதல் தீவிரமாகியுள்ளது.
அவர் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் அரசு கவிழும் என்பது குறிப்பிடத்தக்கது.
உபியில் 55 தொகுதியில் போட்டி:
அதே போல உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியும் சொற்ப இடங்களைத் தந்து காங்கிரசின் மானத்தை வாங்கியதால் அங்கும் தனித்துப் 50 முதல் 55 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரிதா பகுகுனா ஜோஷி கூறுகையி்ல், அப்னா தளம், பகுஜன் சமாஜ் சுவாபிமான் சங்கர்ஷ் சமிதி போன்ற கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிடும்.
50 முதல் 55 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். எங்களுடன் கூட்டணி வைத்துள்ள குட்டி கட்சிகளுக்கு 1 அல்லது 2 தொகுதி வழங்கப்படும். காங்கிரஸ் கட்சி அதிக பலமில்லாத தொகுதிகளில் இவர்கள் போட்டியிடுவார்கள்.
தேர்தலுக்கு முன் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. நாங்கள் நிற்கும் இடங்களில் அவர்கள் போட்டியிட மாட்டார்கள் என கூறினார்கள். ஆனால், தற்போது தங்களது வாக்கை காப்பாற்றத் தவறிவிட்டனர். இதனால் தான் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றார்.
மகாராஷ்டிரம்: காங்-26, பவார்-22
இதற்கிடையே மகாராஷ்டிரத்தில் ஏக இழுபறிக்குப் பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஏற்பட்டுவிட்டது.
இதன்படி மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் 26லும், பவாரின் தேசியவாத காங்கிரஸ் 22 இடங்களிலும் போடியிடும். கடந்த இரு கட்சிகளும் முறையே 27, 21 இடங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேகாலயாவில் மோதல்:
ஆனால், மேகாலயா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்த மத்திய அரசின் மீது கடுப்பில் இருக்கிறார் சரத் பவாரின் தேசியவாத கட்சியின் மூத்த தலைவரான சங்மா.
மேகாலயத்தில் ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ள சங்மா, பாஜக தலைவர் அத்வானியையும் சந்தித்துப் பேசினார்.
இதன்மூலம் மேகாலயாவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உடையும் சூழல் உருவாகியுள்ளது. இங்கு இந்த இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியில் இருந்தன. சமீபத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது.