மூன்று பேரை மணந்த மோசடி பேராசிரியர் கைது
சென்னை: சென்னையில் மூன்று பேரை திருமணம் செய்து ஏமாற்றிய மோசடி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். இது போல் மேலும் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூர் சாலையில் வசிப்பவர் தணிகாசலம். இவரது மகள் சரளாவுக்கும் (27), குமார் (37) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மைலாப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடந்தது. தான் யாரும் இல்லாத அனாதை எனக் கூறிய குமார் திருமணத்தின் போது வரதட்சணையாக 13 பவுன் நகையும், ரூ. 50,000 பணமும் வாங்கியுள்ளார்.
இந் நிலையில் குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணமான விஷயம் சரளாவுக்குத் தெரிய வரவே தேனாமபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கள்ளக்குறிச்சிக்கு அருகே இருக்கும் மூங்கில் துரைப்பட்டு என்ற கிராமம் தான் அவரது சொந்த ஊர் என்றும், அங்கு அவரது தாயார் பாக்கியலட்சுமி வசித்து வருவதும் தெரிய வந்தது. குமார் எம்எஸ்சி, பிஎட், எம்பில் முடித்துள்ளார்.
செங்கல்பட்டில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை அருகே உள்ள அழகானந்தன் கிராமத்தைச் சேர்ந்த புனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இது தான் இவரது முதல் திருமணம். இவர்களுக்கு நவீன் (9), சந்தோஷ் (6), முகேஷ் (4) ஆகிய மகன்கள் உள்ளனர்.
இரண்டாவது திருமணம்...
பேராசிரியர் வேலைவிட்ட குமார் சென்னையை அடுத்துள்ள மேடவாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக சேர்ந்துள்ளார். இதையடுத்து மேடவாக்க்ம் வந்த அவர் அங்கு தனலட்சுமி (21) என்ற பெண்ணிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை, தான் ஒரு அனாதை என கூறி ஏமாற்றி, திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தேவிப்ரியா என்ற 2 மாத கை குழந்தை உள்ளது.
இதையடுத்து புரோக்கர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் சரளாவை மணந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து குமார் மீது ஏமாற்றி வஞ்சித்தல், மோசடி செய்தல், கீழ் வரதட்சணை கொடுமை ஆகிய 3 பிரிவுகளி்ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இது தவிர வேறு பெண்கள் யாரையும் அவர் ஏமாற்றியுள்ளாரா என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications