சிதம்பரம் நடராஜர் கோயில் உண்டியல் திறப்பு - ரூ.2 லட்சம் வசூல்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த மாதம் வைக்கப்பட்ட உண்டியலை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில் ரூ. 2 லட்சம் வசூலாகியுள்ளது.
தமிழகத்சின் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தற்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதையடுத்து கடந்த மாதம் அங்கு அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டது.
அந்த உண்டியலைத் திறக்க தீட்சிதர்கள் தரப்பில் இழுத்தடித்ததால் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக சர்ச்சை நீங்கி உண்டியல் திறக்கப்பட்டது.
அறநிலையத்துறை இணை ஆணையர் திருமகள், கடலூர் உதவி ஆணையர் ஜகன்னாதன், நடராஜர் கோயில் நிர்வாக அதிகாரி சிவகுமார், சிதம்பரம் தாசில்தார் ஞானவன் கிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
அதில் ரூ.2 லட்சம் காணிக்கைப் பணம் இருந்தது. மேலும் அமெரிக்க டாலர்கள், இலங்கை கரன்சிகளும் இருந்தன.
இது பற்றி அறநிலையத்துறை இணை ஆணையர் திருமகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த மாதம் நடராஜர் கோயிலில் வைக்கப்பட்ட உண்டியல் 45 நாட்களு்க்கு பிறகு திறக்கப்பட்டது. அந்த உண்டியலை திறந்து எண்ணப்பட்டபோது அதில் ரூ.2 லட்சம் இருந்தது.
இந்த தொகை நடராஜர் கோயிலின் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உதவி ஆணையர் அந்தஸ்தில் நிர்வாக அதிகாரியை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயிலின் வளர்ச்சி பணிக்காக ரூ.17 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கோயில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்றார்.