கேசரி சாப்பிட்ட 24 பேரு்ககு வாந்தி மயக்கம்!
கும்பகோணம்: கும்பகோணம் அருகே நடந்த பிறந்த நாள் விழாவில் கேசரி சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அடுத்து உள்ளது திருநரையூர். இப்பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவரது மகன் சதீஷின் 19வது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாட முடிவு செய்தார் ஹரிதாஸ்.
இதையடுத்து வீட்டில் தடபுடலான ஏற்பாடுகளை செய்து உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து வீட்டில் விருந்து வைத்தனர்.
அப்போது விருந்தில் கேசரி பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்ட 24 பேருக்கு திடீர் என வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக 24 பேரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். சம்பந்தப்பட்ட கேசரியின் மாதிரியை எடுத்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பினர்.