2 தொகுதிகள் கேட்கிறது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
நாகர்கோவில்: லோக்சபா தேர்தலில் தங்களது கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கோரியுள்ளது.
நாகர்கோவில் வந்த கட்சியின் மாநிலச் செயலாளர் காயல் மெகபூ இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வருகிற லோக்சபா தேர்தலில் இந்திய முஸ்லிம் லீக் கட்சி தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது.
நாங்கள் அகில இந்திய அளவில் போட்டியிடுகின்றோம். கேரளாவில் காங்கிரசுடனும், பல இடங்களில் தனித்தும் போட்டியிடுகிறோம்.
எங்கள் கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் காதர் மைதீன் கடந்த லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்தெடுக்கப்பட்டார். அதை செல்லாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கில் காதர் மைதீனின் வெற்றி செல்லும் என சுப்ரீம் கோர்ட் தற்போது அறிவித்துள்ளது.
வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இந்திய முஸ்லிம் லீக் கொடியை காதர் மைதீன் தலைமையிலான அமைப்பினரை தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது.
தற்போது லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் 2 சீட்கள் கேட்டுள்ளோம். வேலூரையும், வெற்றி வாய்ப்புள்ள மற்றொரு தொகுதியையும் கேட்டுள்ளோம் என்றார் அவர்.