சம்பள உயர்வு கோரி உப்பள தொழிலாளர்கள் ஸ்டிரைக்
தூத்துக்குடி: சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து தூத்துக்குடியில் இருக்கும் உப்பள தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பாரில் இருந்து திருச்செந்தூர் வரை சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. இங்கு உப்பு உற்பத்தி, வாறுதல் போன்ற தொழிலில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2007ம் ஆண்டு உப்பு உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட ஓப்பந்தத்தின் மூலம் ஆண்களுக்கு ரூ.105ம், பெண்களுக்கு ரூ.95ம் தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஓப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர் சங்கங்களுடன் உப்பு தொழிலாளர் சங்கத்தினர் கூலி உயர்வு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக முதல் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.
இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையின் போது தற்போதைய ஊதியத்தில் இருந்து அதிகமாக 25 ரூபாய் உயர்த்தி தருவதாக கூறியுள்ளனர். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளிலும் தொழிலாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக உப்பு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தம் நீடித்து வருவதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 ஆயிரம் டன் வீதம் மேற்கொள்ளப்படும் உப்பு உற்பத்தி இதுவரை 6 ஆயிரம் டன் உப்பு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோடிக்கனக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.