'ஜகா' வாங்கும் ராதிகா!-தேர்தலில் போட்டியில்லை!!
சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா மறுத்துவிட்டார் என்று தெரிகிறது.
பாஜக கூட்டணியில் உள்ள தனது கட்சியின் சார்பில் சிவகங்கையில் ராதிகா போட்டியிடுவார் என சரத்குமார் அறிவித்திருந்தார்.
ஆனால், இப்போது தேர்தலில் ராதிகா போட்டியிட மாட்டார் எனத் தெரியவருகிறது.
அவர் முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதால் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், திருமங்கலம் இடைத் தேர்தலில் வெறும் 800 ஓட்டு வாங்கியதில் இருந்து ராதிகாவுக்கு தனது கட்சி மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதற்கிடையே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகின்றன. தென் மாவட்டங்களில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று மதுரையில் சரத்குமார் விருப்ப மனுக்களை வாங்குகிறார்.
இந்த மாத இறுதிக்குள் வேட்பாளர் பரிசீலனை முடிந்து வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது.
நெல்லை தொகுதியில் சரத்குமார் போட்டியிடுகிறார்.
முன்னதாக ராதிகாவை சிதம்பரத்தை எதிர்த்து சிவகங்கையில் நிறுத்தலாம் என பாஜக சொன்ன யோசனையை ஏற்று அதை அறிவித்தார் சரத்குமார். ஆனால், ராதிகா இதை ஏற்கவில்லை என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications