அதிமுகவில் தொடரும் தொகுதிப் பங்கீட்டு சிக்கல்
சென்னை: அதிமுக கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு இன்னும் சுமூகமாக முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏகப்பட்ட தொகுதிகளைக் கேட்பதாலும், பாமகவுக்கு முக்கிய தொகுதிகளை ஒதுக்க வேண்டியிருப்பாதலும் அங்கும் தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிகிறது.
தற்போதைய நிலையில் அதிமுகவில்தான் நிறைய முக்கிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் சில குட்டிக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாமகவும் சேரப் போகிறது.
இந்த நிலையில் தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளைப் பிரித்துத் தருவதில் சிக்கல் நீடிக்கிறதாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 தொகுதிகளைக் கேட்டுள்ளதாம். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 கேட்டுள்ளது. மதிமுக தரப்பில் 5 தொகுதிகளைக் கேட்டுள்ளனர்.
இதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 3 தொகுதிகள் வரை கிடைக்கலாம்.
இந்த நிலையில், வடசென்னை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், தென்காசி ஆகிய 5 தொகுதிகளையும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேட்கின்றன. ஆனால் கோவை, திருப்பூர், தென்காசி தொகுதிகளில் அதிமுகவே போட்டியிட விரும்புகிறதாம்.
அதேபோல பாமக தங்களுக்கு சிதம்பரம் வேண்டாம் என்று கூறுகின்றனராம். அத்தொகுதியில் திருமாவளவன் போட்டியிடவிருப்பதால் அங்கு தாங்கள் நிற்பதைத் தவிர்க்க விரும்புகிறது பாமக.
கூட்டணி வெற்றிகரமாக அமைந்தும் கூட தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் சிக்கல் நீடிப்பதால் அதிமுக கூட்டணியும் இன்னும் இறுதி வடிவம் பெற முடியாமல் தவிக்கிறது.












Click it and Unblock the Notifications