சிறுநீரக ரத்தக்குழாய் அடைப்பு-பெண்ணுக்கு புதுவாழ்வு
சென்னை: சிறுநீரக ரத்தக்குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக உயிருக்குப் போராடிய டெல்லி பெண்ணுக்கு சென்னை மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சிக்கலான
அறுவைச் சிகிச்சையை செய்து அதை சரி செய்து சாதனை படைத்துள்ளனர். இதனால் அந்தப் பெண்ணுக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் மீனா தோமர். 43 வயதாகும் இவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சிறுநீரகங்கள் பழுதுபட்டன. இதனால் கடந்த
2004ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார்.
அதன் பின்னர் அவருக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அவருடைய தமணி திடீரென விரிவடைந்து பலூன் போல மாறியது. இதனால் சிறுநீரகம் மீண்டும் செயலிழந்தது.
பெரும் அவதிக்குள்ளான அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னைக்குக் கொண்டு மியாட் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மீனா தோமரை, மியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன்தாஸ் முழுமையாக பரிசோதனை செய்தார். அவருக்கு ஸ்கேன் பார்க்கப்பட்டது. அவரது
சிறுநீரக ரத்தக்குழாயில் ரத்தம் செல்லும் வழி அடைக்கப்பட்டிருப்பதால் தமணிக்கு ரத்தம் செல்வது தடைபட்டிருப்பது தெரியவந்தது. இதனால்தான் தமணி வீங்கி விட்டது.
ஆனால் இந்த நிலையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்வது என்றால் இதயத்தை நிறுத்தி வைத்துதான் செய்ய வேண்டும். ஆனால் அது மிகவும் சிக்கலானது என்பதால், 2 கட்டங்களாக அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
முதலில் மீனாவின் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை சரி செய்யும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 18ம் தேதி முக்கிய அறுவைச் சிகிச்சை நடந்தது.
அன்று மீனாவின் நெஞ்சுப் பகுதியில் ஆபரேஷன் செய்யப்பட்டது. பின்னர் பாதிப்புக்குள்ளான பெரிய தமணியில் இருந்து மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் மற்றும் இதர பாகங்களுக்கு செல்லும் ரத்தக்குழாய்களை
துண்டித்தனர். அவற்றின் வழியாக செல்லும் ரத்தம் பொது தமணி குழாய் வழியாக திருப்பி விடப்பட்டது.
ஒரு மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் கீஹோல் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதன் இறுதியில் சிறுநீரக செயல்பாடு இயல்பு நிலைக்குத் திரும்பியது.
மிகவும் சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால், அறுவைச் சிகிச்சைக்குத் தலைமை தாங்கிய டாக்டர் வி.வி.பாஷி மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த அறுவைச் சிகிச்சை குறித்து மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் கூறுகையில், இதுபோன்ற அறுவைச் சிகிச்சை மிகவும் கடினமானது. உலகிலேயே முதல் முறையாக மிகவும் சவாலான இந்த அறுவைச் சிகிச்சையை எங்களது மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
மீனா தற்போது புதுவாழ்வு பெற்றுள்ளார். நலமுடன் உள்ளார் என்றார்.
டாக்டர் பாஷி கூறுகையில், இதுபோன்ற அறுவைச் சிகிச்சை இதுவரை உலகில் மொத்தம் 25 பேருக்குத்தான் நடந்துள்ளது. மியாட்டில் இதுவரை 6 பேருக்கு இவ்வாறு செய்துள்ளோம்.
அதேசமயம், மீனாவுக்கு சிறுநீர கோளாறுடன் அவரது உயிருக்கு ஆபத்தும் இருந்ததால், அந்த வகையில், இது முதலாவது அறுவைச் சிகிச்சையாகும்.
மிக மிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை, சாதாரணமாக பயன்படுத்தப்படும் மயக்க மருந்து (அனஸ்தீஸியா) கொடுத்தே செய்துள்ளோம்.
2வதாக நடத்தப்பட்ட கீஹோல் அறுவைச் சிகிச்சையை மீனா முழு நினைவுடன் பார்த்தபடி இருந்தார் என்றார் பாஷி.
பேட்டியின்போது உடன் இருந்த மீனாவின் சகோதரர் அசோக், எனது சகோதரிக்கு 2வது வாழ்க்கை கிடைத்துள்ளது. இதை அளித்த டாக்டர்களுக்கும், மியாட் மருத்துவமனைக்கும் நன்றி என்றார்.












Click it and Unblock the Notifications