எஸ்எஸ்எல்சி தேர்வுகள்-8.4 லட்சம் எழுதுகின்றனர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8,42,350 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வெழுதுகின்றனர். இதில் தனித் தேர்வர்கள் 50,000 பேர்.
காலால் எழுதிய மாணவி:
திருக்கோவிலூரில் இரு கைகளையும் இழந்த மாணவி ஒருவர் காலால் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினார்.
அண்ணாமலை-பழனியம்மாள் தம்பதியினரின் மகளான வித்யஸ்ரீக்கு பிறவியிலேயே 2 கைகளும் இல்லை. ஆனாலும் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் வளர்ந்த இவர் இடது கால் விரல்களுக்கிடையே பேனாவை பிடித்து, எழுத பயிற்சி பெற்றார்.
பின்னர் தனது ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். எஸ்எஸ்எல்சி தேர்வை காலால் எழுதினார். இதைக் கண்ட பல மாணவிகள் கண் கலங்கினர்.
மாணவி வித்யஸ்ரீக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரத்தை ஒதுக்கி கல்வித்துறையினரும் தங்களது கடமையை முழுமையாகச் செய்தனர்.
பெண் என்றாலே சுமை தான் என நினைக்கும் இந்த காலத்தில் என்னை எனது பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துடன் படிக்க வைக்கின்றனர். எப்படியாவது ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்கிறார் வித்யஸ்ரீ.
தேர்வெழுதிய கைதிகள்:
இந்தத் தேர்வை சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள 59 கைதிகளும் எழுதினர். இதற்காக சிறையில் சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக மத்திய சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கைதிகள் தேர்வெழுதியபோது தமிழக சிறைத்துறை டிஐஜி ஆர்.நடராஜ் அதை பார்வையிட்டார்.
தேர்வு எழுதியவர்களில் 80 சதவீதம் பேர் ஆயுள் தண்டனை கைதிகள்.
ஆள் மாறாட்டம்-கைது:
மதுரை அரசு தேர்வு துறை மண்டல அலுவலகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் திருமங்கலத்தில் உள்ள பள்ளியில் ஒரு மாணவர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து உசிலம்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி விஷ்ணுபிரசாத் தலைமையில் பறக்கும் படையினர் சென்று சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது எஸ்எஸ்எல்சி தனித்தேர்வு மாணவர் ஆர்.வினோத் என்பவருக்கு பதிலாக அவரது உறவினர் விக்கிரமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் பி.சுந்தர் தேர்வு எழுதியது தெரியவந்தது. அனுமதி சீட்டிலும் தனது புகைப்படத்தை போலியாக ஒட்டி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பிடிபட்ட மாணவர் சுந்தரை கல்வி அதிகாரிகள் திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் சுந்தரை கைது செய்தனர்.