போலி டிடி: ரூ. 40 கோடி மோசடி-காண்ட்ராக்டர் கைது
சென்னை: போலியான டிமான்ட் டிராப்டுகளை கொடுத்து ரூ. 40 கோடி பணத்தை மோசடி செய்த மும்பையைச் சேர்ந்த கான்ட்ராக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கில், சொத்துக்கள் ஏலம் விடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை ஏலம் எடுக்க மும்பையை சேர்ந்த காண்ட்ராக்டர் அன்சாரி முகமது அசன், பெங்களூரை சேர்ந்த ஷெரீப் மற்றும் ராஜசேகர் ஆகிய 3 காண்ட்ராக்டர்கள் டெண்டர் கேட்டிருந்தனர்.
இதற்காக 3 பேரும் தலா ரூ. 13 கோடியே 25 லட்சத்துக்கு டிடி கொடுத்திருந்தனர். ஆனால் திடீரென தாங்கள் டெண்டரிலிருந்து வாபஸ் பெறுவதாகவும், கொடுத்த டிராப்டுகளை திரும்பத் தருமாறும் கோரினர். ஆனால் இதை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்த நிலையில் மூன்று பேரும் கொடுத்த டிராப்டுகள் வங்கியில் போடப்பட்டபோது அவை போலியானவை என்று தெரிய வந்தது. 3 பேரும் சேர்ந்து ரூ.39 கோடியே 75 லட்சத்துக்கு போலி டிமாண்ட் டிராப்ட் கொடுத்து உயர்நீதிமன்றத்தை ஏமாற்றி மோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து 3 பேர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனலர் மாலா போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்ற காவல் நிலையத்திற்கு ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
விசாரணைக்குப் பின்னர் அவர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்ய உயர்நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதைடுத்து அன்சாரி முகம்மது அசன் போலீஸில் சரணடைந்தார். அவரைக் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மற்ற இருவரும் சரணடையவில்லை. அவர்களைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications