For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியை சந்திக்கும் ஆசாத்: இன்றே திமுக-காங் தொகுதி உடன்பாடு!

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi and Gulamnabi
சென்னை: திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதியுடன் காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் தலைமையில் காங்கிரஸ் குழு இன்று பேச்சு நடத்துகிறது. இதையடுத்து இன்றே தொகுதிப் பங்கீடு முடிவாகிவிடும் என்று தெரிகிறது.

இன்றிரவு இந்தச் சந்திப்பு நடக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் தங்கபாலு கூறுகையில்,

திமுகவுடன் தொகுதி பங்கீடு செய்வது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இன்றிரவு 7 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், கட்சியின் தமிழக பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத் சென்னை வருகிறார்.

அவருடன் இன்றைய கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை விவரங்களை தெரிவிப்போம். அதன் பின்னர் குலாம்நபி ஆசாத் தலைமையில் நான் உள்ளிட்ட தொகுதி பங்கீட்டுக் குழுவினர் முதலமைச்சர் கருணாநிதியை இன்றிரவே சந்தித்து பேச உள்ளோம்.

இந்த சந்திப்பில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாடாளுமன்ற தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவாகும்.

கூட்டணியிலிருந்து வெளியேறிய பாமக மே 16ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதற்காக வருந்த வேண்டி இருக்கும். காங்கிரஸ்-திமுக கூட்டணி கடந்த முறை போலவே இந்த முறையும் 40 இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என்றார்.

திமுகவும் காங்கிரசும் தொகுதிப் பங்கீடு குறித்து ஏற்கெனவே முதல் கட்டமாகப் பேச்சு நடத்தின. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் கருணாநிதி தொகுதிப் பங்கீடு குறித்து பலமுறை தொலைபேசியில் பேச்சு நடத்திவிட்டார்.

முதல்வருடன் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேல், குலாம் நபி ஆகியோரும் பல முறை பேசிவிட்டனர். அதே போல காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவையும் டெல்லிக்கு அழைத்து சோனியா, குலாம் நபி, அகமத் படேல் ஆகியோர் பலமுறை பேசிவிட்டனர்.

இதனால் தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதிகள் யாருக்கும் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டதாகத் தெரிகிறது. இன்று இரவு நடக்கும் சந்திப்பில் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகி அறிவிப்பும் வெளியாகிவிடும் என்று தெரிகிறது.

கடந்த முறை திமுக 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் 10 தொகுதியிலும் போட்டியிட்டு வென்றன. இம் முறை கூட்டணியில் பெரிய கட்சிகள் ஏதும் இல்லாத நிலையில் காங்கிரஸ் 16 தொகுதிகளைக் கேட்கிறது. அக் கட்சிக்கு 15 இடங்கள் தரப்படும் என்று தெரிகிறது.

காங்கிரசுடன் பேச்சு நடத்திய பின் பிற கட்சிகளுடன் திமுக குழு அடுத்தடுத்து பேச்சு நடத்தி விரைவில் தொகுதி உடன்பாட்டை முடிக்கவுள்ளது.

ஏப். 2ல் திமுக நேர்காணல்..

இதையடுத்து வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் தனது வேட்பாளர்களிடம் நேர்காணலை நடத்தவுள்ளது திமுக.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X