ஜெ. பிரதமரா?-நாடு தாங்காது: இளங்கோவன்
ஈரோடு: சட்டையை மாற்றுவது போல் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றி வரும் பாமகவின் அரசியல் வியாபாரம் எத்தனை நாளைக்கு லாபகரமாக இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் இளங்கோவன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டையை மாற்றுவது போல் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றி வருகிறது பாமக. தற்போது அவர்கள் அணி மாறியதும் எதிர்பார்த்ததுதான்.
மந்திரி பதவியல் இருந்து அன்புமணி ராஜினாமா செய்த பிறகு கூட்டணி மாறும் முடிவை சொல்லியிருந்தால் சற்று நாகரீகமாக இருந்திருக்கும். பாமகவின் வியாபாரம் எத்தனை நாளைக்கு லாபகரமாக இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.
திருமாவளவன் கூட்டணியில் இருப்பாரா, இல்லையா என்பதை எங்கள் தலைவி சோனியாவும், முதல்வர் கருணாநிதியும் அறிவிப்பார்கள். விஜயகாந்த் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி விட்டார். காங்கிரசுடன் சேராததால் இழப்பு யாருக்கு என்பதை மக்கள் அவருக்கு தெளிவுபடுத்துவார்கள்.
மூன்றாவது அணியின் வெற்றி பூஜ்யம்தான். ஜெயலலிதா, மாயாவதி ஆகியோர் பிரதமர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டால் நாடு தாங்காது.
மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தால் மக்கள் பயனடைந்தள்ளனர். திமுக அரசின் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டி.வி, இலவச சமையல் கேஸ் அடுப்பு திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள் இறக்குவதை எதிர்த்து தங்கபாலு உண்ணாவிரதம் இருந்தது சரியல்ல. தேர்தலுக்கு பிறகு கள் மீதான தடையை நீக்குவது குறித்து முதல்வருடன் பேசுவோம் என்றார்.