வீரப்பன் கோட்டை..முதன் முதலாக தேர்தல் பிரசாரம்

சந்தனக் கடத்தல் வீரப்பன் பிறந்த ஊர் கோபிநத்தம். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மலை மாதேஸ்வரன் மலைப் பகுதியில் இந்த கிராமம் உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக இங்கு தேர்தல் பிரசாரம் என்பதே இல்லாமல் போயிருந்தது. காரணம், வீரப்பனின் ஆதிக்கம். அரசியல் கட்சியினர் யாரும் இக்கிராமத்திற்குள் நுழைய முடியாத நிலை.
ஆனால் இப்போது வீரப்பன் இல்லை, அவனது அட்டகாசமும் இல்லை, ஆள் அம்பு பரிவாரமும் இல்லை. இதனால் முதல் முறையாக கோபிநத்தம் கிராமத்தில் பிரசாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது.
கோபிநத்தம் மட்டும் இன்றி, அக்கம் பக்கத்து மலை கிராமங்களிலும் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்ய தயாராகி வருகின்றனர்.
கடந்த காலங்களில் இப்பகுதிகளுக்கு வரவே வேட்பாளர்களும், அரசியல்வாதிகளும் பயப்படுவார்கள். அப்படியே வரத் துணியும் சிலரும் கூட பலத்த பாதுகாப்புடன்தான் வந்து போயினர். ஆனாலும், வீரப்பனின் ஆதரவு பெற்றவர்களுக்கு மட்டுமே அந்த அனுமதியும் கூட கிடைத்தது.
இதனால் கடந்த 30 வருடங்களாக கோபிநத்தம் கிராமத்தில் எந்தவித கொண்டாட்டமும், தேர்தல் ஆரவாரங்களும் இருக்காது. யாரும் எளிதில் வந்து போக முடியாத அளவுக்கு கோபிநத்தம் தனிமைப்பட்டுக் கிடந்தது.
கடந்த 2004ம் ஆண்டு வீரப்பனை தமிழக அதிரடிப்படை போலீஸார் சுட்டுக் கொன்ற பின்னர் கோபிநத்தம் கிராமம், வீரப்பனின் பயப் பிடியிலிருந்து விடுபட்டு விட்டது.
சாம்ராஜ் நகர் தொகுதி எட்டு சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதில் ஹானூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர் சட்டசபைத் தொகுதிகள் கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியில் உள்ளன.
வீரப்பனின் கிராமமான கோபிநத்தம், மலை மாதேஸ்வரா மலைப்பகுதியில் உள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதியி்ல் இருக்கும் இக்கிராமம், ஹானூர் தொகுதிக்குட்பட்டதாகும்.
வீரப்பன் கொல்லப்பட்ட பின்னர் இங்கு நடைபெறும் 2வது தேர்தல் இது. கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடந்தது. அதன் பின்னர் இப்போது லோக்சபா தேர்தல் வருகிறது.












Click it and Unblock the Notifications