தேர்தல்-நானும் இருக்கேன்..நினைவூட்டும் டி.ஆர்.
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதில் லட்சிய திமுக எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்தும், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் விவாதிக்க நாளை லட்சிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக அக் கட்சியின் தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, மாநில சிறு சேமிப்புத்துறையின் துணைத் தலைவராக பதவி வகித்துக்கொண்டிருந்த நான், அந்த பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்து விட்டு போராடத் தொடங்கினேன். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்தேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக அரசுத் தரப்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றாலும், டெல்லியில் நடந்த கூட்டம் என்றாலும் அதிலும் கலந்து கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வந்தேன். இதைத் தவிர பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் நடத்திய போராட்டங்களிலும், உண்ணாவிரதங்களிலும் கலந்து கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வந்தேன்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஓராண்டு காலமாகவே லட்சிய திமுக லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றன.
இந் நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், லட்சிய திமுக எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்தும், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் லட்சிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 29ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு லட்சிய திமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது.
நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில்...
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் ஆளாகப் போய் அதிமுக கூட்டணியில் தானாகவே போய்ச் சேர்ந்தார் ராஜேந்தர். தனது கட்சிக்கு 4 இடம் கேட்ட அவருக்கு ஒரு சீட் கூட தர முடியாது என்று ஜெயலலிதா கூறிவிட்டார். இதையடுத்து இடப் பங்கீடு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் சீட்டே தராவிட்டாலும் பரவாயில்லை என்று திமுக கூட்டணிக்கு தாவினார் டி.ஆர்.
ஆனால், திமுக கூட்டணியிலுல் கண்டுகொள்ளப்படாததால் அதை விட்டு விலகுவதாக அவர் அறிவிக்க மாநில சிறு சேமிப்புத்துறையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியின் மூலம் ஒரு வெள்ளை நிற அரசு அம்பாசிடர் கார் தவிர வேறு எதுவும் டி.ஆருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.