பிலிப்பைன்ஸ்: தீவிரவாதிகள்-ராணுவம் மோதல், 27 பேர் பலி
மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே திடீர் மோதல் மூண்டது. இதில் 20 தீவிரவாதிகளும், 7 ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பிராந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் போன்ஸ் கூறுகையில், பியலாங் என்ற கிராமத்தில், தடை செய்யப்பட்ட மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி தீவிரவாத அமைப்பைச் சேர்நத் தீவிரவாதிகள் அணி சேருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு ராணுவத்தின் 601வது பிரிவு வீரர்கள் சென்றனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் மூண்டது.
எட்டு மணி நேரம் நடந்த சண்டையில் 20 தீவிரவாதிகளும், 7 ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதத் தலைவர் உம்ப்ரா கடோ தலைமையிலான தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே இந்த ஆண்டு நடந்த மிகப் பெரிய சண்டை இதுவாகும்.
அதேபோல, மமசாபனோ என்ற இடத்தில் நடந்த இன்னொரு சண்டையில் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர்.
கடோ மற்றும் அவருடன் உள்ள தீவிரவாத தலைவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தி நாட்டை ரத்தக்களறியாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதை ராணுவம் முறியடிக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications