அதிமுக 22 தொகுதிகளில் போட்டியிட முடிவு
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 22 தொகுதியில் போட்டியிடும் எனத் தெரிகிறது. மதிமுக 5 தொகுதிகளிலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 3 தொகுதிகளிலும் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. ஏற்கனவே பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்களது கூட்டணிகளை இறுதி செய்து விட்டன. திமுக கூட்டணியில் எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை கருணாநிதி நேற்று இரவு அறிவித்தார்.
அதேபோல அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக பாமகவுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையும், தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.
அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கான சீட்கள் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் அவற்றுக்கான உடன்பாடு முடிவாகி விட்டதாக தற்போது கூறப்படுகிறது. அதன்படி அதிமுக 22 தொகுதிகளில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. மதிமுகவுக்கு 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா 3 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளனவாம்.
திருவள்ளூர், மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடு துறை, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம் எனத் தெரிகிறது.
விருதுநகர், ஆரணி, தூத்துக்குடி, திருச்சி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மதிமுக போட்டியிடலாம்.
வட சென்னை, தென்காசி நாகப்பட்டினம் ஆகியவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மதுரை, கோவை, திருப்பூர் ஆகியவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்படலாம்.
ஏற்கனவே பாமக ஸ்ரீபெரும்பதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிதம்பரம், தருமபுரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது.
விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் இவற்றை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.