ரூ. 72 லட்சம் கோடி கறுப்பு பணம் வெளிக் கொண்டு வரப்படும்-அத்வானி
டெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்தால் சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ 72 லட்சத்து 80 ஆயிரம் கோடி வெளி கொண்டு வரப்படும். தற்போது 'ஜி-20' மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கும் இதை வலியுறுத்த வேண்டும் என பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு ஓட்டளித்தால், வெளிநாட்டில் ரகசியமாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தை வெளி கொண்டு வருவோம். இதன்மூலம் இந்தியாவை வளமையான, செழிப்பான நாடாக மாற்ற முடியும்.
சுவீஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் ரூ. 72 லட்சத்து 80 ஆயிரம் கோடியை வெளி கொண்டு வருவோம். இது தான் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். இது தொடர்பாக பாஜக துவக்கப்பட்ட நாளான வரும் ஏப்ரல் 6ம் தேதி மக்களிடம் கருத்து கேட்கப்படும்.
இது தொடர்பாக பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பிரதமருக்கு கோரிக்கை வைக்க வேண்டும். தற்பேது ஜி-20 மாநாட்டில் பங்கேற்க லண்டன் சென்றுள்ள பிரதமர் கறுப்பு பணத்தை வெளி கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் கடனை அடைத்துவிடலாம்...
இந்த பணத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் ஏழை விவசாயிகள் அனைவரின் கடனையும் அடைக்க முடியும். நாடு முழுவதும் தேவையான அளவு சாலை வசதிகள் செய்ய முடியும். கிராமங்களில் இருக்கும் 6 லட்சம் ஏழை இந்தியர்களுக்கு தலா ரூ 4 கோடி வழங்க முடியும்.
இந்த பணம் தொழிலதிபர்கள், திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், போதை மருந்து கடத்தல் கும்பல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மற்றும் ஆயுத பேரம் உள்ளிட்ட தரகு வேலை செய்கிறவர்கள் ஆகியோரால் வைக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு பயன்படுகிறது...
தாங்கள் முறைகேடாகச் சம்பாதிக்கும் தொகையை அங்கே கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். இந்த பணத்தைத்தான் பயங்கரவாதிகளின் செலவுகளுக்கும் பலர் அள்ளித்தருகிறார்கள். எனவே இந்த கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்வது தேசியக் கடமையாகும். இதைச் செய்வதன் மூலம் இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்து நாட்டைச் சுரண்டியவர்கள் யார் என்று மக்களுக்கு அறிவிக்க முடியும்.
இந்த வங்கிக் கணக்கு விவரங்களை ரகசியமாக பாதுகாப்பதற்கு மேலை நாடுகளில் தனிச்சட்டமே இயற்றப் பட்டிருந்தாலும் சமீப காலமாக சமூக ஒழுக்கத்துக்கான அமைப்புகள் அந்த ரகசியம் காப்பது என்ற சலுகையை சமூகவிரோதிகள் தவறாகப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் வெளிநாட்டு வங்கிகள் மூலம்தான் பணம் தரப்பட்டது, அல் கொய்தா போன்ற பயங்கரவாதிகளுக்கு இதுதான் மிகவும் பயன்படுகிறது என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றார் அத்வானி.