மதுரைக்கு மு.க. அழகிரி - கன்னியாகுமரிக்கு மகள் கயல்விழி?

தொகுதிப் பங்கீட்டில் சென்னை நகரில் உள்ள 3 தொகுதிகளையும் திமுகவே எடுத்துக் கொண்டு விட்டது.
இதில் மத்திய சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீண்டும் போட்டியிடுவார். வட சென்னையில் இம்முறை செ.குப்புசாமி போட்டியிட மாட்டார் எனத் தெரிகிறது. அதேபோல தென் சென்னையில் டி.ஆர்.பாலுவுக்குப் பதில் வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவார்.
ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மதுரை தொகுதியை திமுக தன் வசமே வைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸுக்கு இத்தொகுதி கொடுக்கப்படவில்லை. எனவே இத்தொகுதியில் மு.க.அழகிரி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
ஒரு வேளை அழகிரியை நிறுத்த வேண்டாம், அவரை தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி நினைத்தால் இந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மகன் தியாகராஜனுக்குக் கிடைக்கலாம் என்று தெரிகிறது.
அதேபோல தேனி தொகுதியில் அழகிரியின் மகள் கயல்விழி போட்டியிடலாம் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேனி தொகுதியை காங்கிரஸுக்குக் கொடுத்து விட்ட திமுக, அதற்குப் பதிலாக கன்னியாகுமரியை தன் வசம் வைத்துக் கொண்டுள்ளது.
கன்னியாகுமரியில் கயல்விழி போட்டியிடுவார் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications